பால்குடி டேஸ் 17 - தருமபுரி நினைவுகள்.
இறுதிப் பகுதி.
10 ஆவது பாஸ் பண்ணி 11 ஆவது போயாச்சு. இந்த வருஷம் கொஞ்சம் சீரியஸா படிக்க வேண்டிய வருஷம். அதுனால ஊர் சுத்தறத கொஞ்சம் கொறைச்சுட்டோம் நாங்களாவே. ஆனாலும் க்ளாஸ்ல கலாட்டா செய்யறது நிக்கல. எங்க இன்ஜினியரிங் சைன்ஸ் வாத்தியார் பேர் ரங்கநாதன். (கு.ரங்கநாதன் இல்ல, இன்னொரு ரங்கநாதன்) அவர் அப்பறம்னு சொல்றதுக்கு பதில் பிற்பாடுன்னு தான் சொல்லுவாரு. அதுனால அவருக்கு பிற்பாடுன்னே பேரு. நாங்களும் அவர் ஏதாவது கேட்டா பிற்பாடுன்னே சொல்லுவோம். ஒருதடவை அவருக்கு டவுட் வந்துடுச்சு. நீங்கள்லாம் என்னை கிண்டல் செய்ய பிற்பாடுன்னு சொல்றீங்களா இல்ல நெஜமாவே அப்படிதான் சொல்றீங்களானு கேட்டாரு. மோஹன்னு எங்க செட் பையன் ஒருத்தன், இல்ல ஐயா, தமிழ் ஐயா அப்படிதான் சொல்ல சொல்லிருக்காரு அதான்னு சொன்னான். ஏதோ அரைகுறையா நம்பிட்டாரு.
அவரு வந்த ஒடனே "எல்லாரும் ஓம் ஒர்க் (அப்படிதான் சொல்வாரு) எடுத்து வெளில வைன்னு சொல்வாரு. பிற்பாடு "ஓம் ஒர்க்" செய்யாதவன் எல்லாம் எந்திரிச்சி நில்லு அப்படிம்பாரு (அவரோட தமிழ் அப்படிதான்) பிற்பாடு "எந்திரிச்சி நின்னவன் எல்லாம் இங்க வா"ன்னு கூப்பிடுவார். ஒரு பய போக மாட்டான், அவருக்கு கிட்டப் பார்வை. எதையும் உத்துப் பாத்தாதான் தெரியும். கண்ணுக்கிட்ட வெச்சு உத்துப் பாப்பாரு. அதுனால பின்னாடி நிக்கற பையன் எல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க. சில பேரு வேணும்னே எழுந்து நிப்பாங்க, இவரு என்ன செஞ்சுடப் போறாருன்னு. யாரும் வரலைன்னதும் "உப்போ (இப்ப) நீ இங்க வரியா, இல்ல நான் அங்க வரட்டுமா"ன்னு கேப்பாரு. அவரோட பேச்சு இப்படியேதான் இருக்கும் எல்லாத்துக்கும். அதுனால பையன்களும் அப்படியே பேசுவானுக. நான் கொஞ்சம் மிமிக்ரி செய்வேன். அதுனால என்ன கடைசி பெஞ்சுல கூப்பிட்டு வெச்சுவாங்க இவர் பீரிட்ல (அப்படிதான் அப்ப சொல்வோம் யுவர் ஆனர், இன்னும் சில பேர் பிரீடுன்னு சொல்வாங்க) அவர் வந்து அவரோட வழக்கமான கேள்விங்கள முடிச்சவுடனே நான் அவர் கொரல்ல ஆரம்பிப்பேன். "யூனிஃபார்ம் போடாதவன்லாம் எந்திரி" னு, ஒரு 4, 5 பேரு எந்திரிப்பாங்க. "எல்லாம் இங்க வா"ன்னு சொல்வேன் பிற்பாடு. அதுக்கும் பிற்பாடு "உப்போ நீ யூனிஃபார்ம் போட்டுனு வரியா இல்ல நான் போட்டுனு வரட்டா"ன்னு நான் சொன்ன ஒடனே க்ளாஸே "கொல்"லுனு சிரிக்கும். இவருக்கு எவன் சொன்னான்னு கண்டு படிக்க முடியாது இவரோட ஷார்ட் சைட்னால.
அப்பல்லாம் ஸ்கூல் ஃபைனலா இருந்தா கூட லேப் கிடையாது. சும்மா பிப்பெட், பியூரெட் எல்லாம் எடுத்துட்டு வந்து ஒரு நாள் டெமான்ஸ்ட்ரேட் செய்வாங்க, அதோட சரி. இப்படித்தான் பியூரெட் எடுத்து வந்து அவர் டெமான்ஸ்ட்ரேட் செஞ்சாரு ஒரு வாட்டி. அதுல ஸல்யூஷன் எந்த ரீடிங்க்ல இருக்குன்னு அவரால கரெக்ட்டா பாக்க முடியல, அதுனால என்னைக் கேட்டாரு, நான் கரெக்ட்டா சொன்னேன். அவருக்கு நம்பிக்கை வரல. இன்னொருதனைக் கூப்பிட்டு கேட்டாரு, அவன் தப்பா சொன்னான். இன்னும் ரெண்டு பேரும் இப்படியே சொல்லவே, கடைசில அவரோட நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆல் ஃபிரெடை (ஆல் ஃபிரெடா அவன், ஆல் ஃபிராடு) அவன் சான்ஸே இல்லாத ஒரு ரீடிங் சொன்னான். அவர் நம்பிட்டாரு. எங்களுக்கெல்லாம் கடுப்பு. இப்படியே எங்க கடுப்பு ஏறிக்கிட்டே போச்சு.
ஏன்னா, அவரு ஆல் ஃபிரெடை நம்பித்தான் ஸ்பெஷல் டீ வாங்கியார சொல்லுவாரு. அவன் என்ன செய்வான்னா, சாதா டீ வாங்கி அதுல மாஸ்டர் டீ போட்டு வெளில கொட்டி வெச்சிருக்கற தூள எடுத்து இந்த டீல கலந்து வடிகட்டி எடுத்து வருவான். சார், "இன்னிக்கு டீ நல்லா இக்குதே"ன்னு சொல்வாரு, அதுக்கு அவன் "உங்களுக்காக ஸ்பெஷலா போட சொல்லி வாங்கி வந்தேன்னு சொல்லுவான். சாதா டீ 15 பைசா. ஸ்பெஷல் டீ 20 பைசா. மீதி 5 பைசாக்கு முறுக்கு, வடை இப்படின்னு வாங்கித் தின்னுட்டு வருவான். இது எங்களுக்கும் தெரியாது. நம்ம மோஹன் ஒரு நாள் அவன் கூட போயிட்டு இதை கண்டுக்கினு வந்துட்டான். எங்க கிட்ட சொல்லிட்டான். நாங்க சமயம் வரட்டும்னு வெயிட் பண்ணோம்.
ஒரு தடவ இவர் க்ளாஸு ரொம்ப போர் அடிக்கவே எல்லாம் சத்தம் போட்டு பேசிட்டிருந்தோம். இவர் கோவம் வந்து எல்லாசையும் நல்லா திட்டிட்டாரு. அதோட விட்டிருந்தா பரவாயில்ல. "ஆல் ஃபிரெட பாருங்க, எவ்வளோ நல்ல பையன், நீங்க எல்லாம் அவன மாதிரி இருக்கோணும்"னு சொன்னாரு, உடனே நம்ம மோகன் "எப்படி சார், ஸ்பெஷல் டீன்னு சொல்லி சாதா டீ வாங்கி உங்களை ஏமாத்தறானே, அப்படியா"ன்னு கேட்டான். வாத்தியாருக்கு, முகம் கறுத்துப் போச்சு. கோவத்துல வார்த்தை வரல. "ஆல் ஃபிரெடு, நீதான் நல்ல பையன்னு, நெனச்சேன், உப்பதான் தெரியுது நீ நல்ல பையன் இல்லன்னு" சொல்லிட்டு க்ளாஸ விட்டு வெளிய போயிட்டாரு. (அதுக்கப்பறமும் அவனேதான் டீ வாங்கி வந்ததும், அவன் டீ வெலைய அவனாகவே 25 பைசாவா ஏத்திட்டதும் வேற கத)
ஒரு நாள் இவரு "நாளைக்கி நான் பிரிஸம் மூலம் "ஒளி ஊடுருவல்" (REFRACTION OF LIGHT THROUGH PRISM) பாடம் நடத்தப் போறேன், அல்லாரும் ஆப்சென்ட் ஆகாம வந்துருங்கோ, பிற்பாடு நான் வரல, எனக்குத் தெரியலன்னு சொல்லாதீங்கோ"ன்னு சொன்னாரு. நாங்களும் இது புதுசா இருக்கேன்னு ஆர்வமா வந்தோம். இவருக்கு பீடி குடிக்கற பழக்கம் உண்டு. மிலிட்டரி கிரீன் கலர்ல ஒரு துணிப்பை எடுத்து வருவாரு. அதுலதான் அன்னிக்கு பாடம் நடத்த வேண்டிய புக், சாக்பீஸ், பீடிக்கட்டு எல்லாம் இருக்கும். வந்த ஒடனே மொதல்ல சாக்பீஸ் எடுத்து வெப்பாரு, அன்னிக்கு அவசரத்துல பீடிக் கட்ட எடுத்து வெச்சுட்டாரு. நாங்களும் கவனிக்கல, போர்டுல எதோ எழுதறதுக்கு சாக்பீஸ் எடுக்கறப்பதான் தெரிஞ்சுது அது பீடிக் கட்டுன்னு. அவசரத்துல அவரால அத பைக்குள்ள வெச்சுட்டு சாக்பீஸ எடுக்க முடியல. அப்பறம் என்ன ஒரே தமாஷ்தான். சரி சரி, பாடத்துக்கு வருவோம்னு சொல்லிட்டு பைலேர்ந்து பிரிஸம் எடுத்தாரு. ஒரு பையனை வெளில போயி நிக்க சொன்னாரு, ஒளி ஊடுருவி அவன் பிம்பம் அது வழியா அவர் பிரிஸம் பின்னாடி வெச்சிருக்கிற அட்டைல தெரியும்னு காமிக்கறது அவரோட ஐடியா, ஆனா போன ஆளு நம்ம மோகன்ராஜ். அவன் சும்மா நிக்காம அவர் பிரிஸத்த அட்ஜஸ்ட் செஞ்சிட்டிருக்கிறப்ப பரதநாட்டியம் எல்லாம் ஆடினான். இவருக்கு கடுப்பாயிடுச்சு. யாரும் வெளில நிக்க வேணாம், நான் ஒரு மெழுகுவத்தி கொளுத்தி டெமான்ஸ்ட்ரேட் செய்யறேன்னு சொல்லி பசங்க கிட்ட நெருப்புப் போட்டு கேட்டாரு. நம்ம மோகன் சார், உங்க பையிலேயே இருக்குமேன்னு சொன்ன ஒடனே மறுபடி குபீர் சிரிப்பு. சாருக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. சரின்னு மெழுகுவர்த்தியை கொளுத்தி டெமோன்ஸ்ட்ரேட் செய்ய ஆரம்பிச்சாரு. எல்லாரும் அவரை சுத்தி நின்னுக்கிட்டு குனிஞ்சி பாத்திட்டிருந்தாங்க. எங்க செட்ல ரவிச்சந்திரன்னு ஒருத்தன். ஸ்கூல்லயே பிரபலம். அவ்வளவு நல்லா படிப்பான். அவன் குனிஞ்சு பாத்திட்டிருந்தான். அவன் தலைக்கு மேல மோகன்ராஜ். அவன் லேசா ஒரு ஊது ஊதி மெழுகுவர்த்தியை அணைச்சுட்டான். வாத்தியார் ஏற்கெனவே கடுப்புல இருந்தாரு. ரவிச்சந்திரன்தான் மெழுவத்திக்கிட்ட நின்னிட்டிருந்ததால அவன்தான் அணைச்சுட்டான்னு ஓங்கி ஒரு அறை விட்டாரு அவன் கன்னத்துல. அவனுக்கு ஒரே கோவம், பின்னாடி வந்து நின்னுட்டான். அவன சமாதானப் படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

இதெல்லாம் ஜெனெரலா ரெண்டு மூணு க்ளாஸ கூட்டி வெச்சு நடத்தினது. எங்களுக்கு எலெக்டிவ்ஸ் என்ஜினீரிங்க்ல சைன்ஸ் இன்ஜினியரிங் வாத்தியாரும் இவரேதான். நாங்க பதினாலு பேர்தான் அதுல. அதுனால இவர் ஒவ்வொருத்தரா வர சொல்லி நோட் வாங்கி கரெக்ஷன் செய்வாரு. நான் என் நோட்ட ரெடியா எடுத்து வெச்சிருந்தேன். நான் ரஃப் நோட்டுக்கு அந்த வருஷ புது டைரிதான் யூஸ் பண்ணுவேன். எதுக்கோ டைரிய எடுத்துப் பாத்தப்ப அதுல ஒரு மாச ஷீட் கிழிச்சிருந்தாங்க யாரோ, நான் பக்கத்துல இருந்த பையன் கிட்ட கேட்டப்ப அவன் ஜனார்தன் சிங்தான் கிழிச்சான்னு சொன்னான். அப்ப ஜனார்தன் சிங் சார் கிட்ட கையெழுத்து வாங்கிட்டிருந்தான். நான் கீழே குனிஞ்சு பாத்தேன், தரை அங்க இங்க பேர்ந்து சின்ன சின்ன செங்கலா இருந்துச்சு. நல்லா ஒரு எலுமிச்சம்பழம் அளவு இருக்கற கல்ல எடுத்து குறி பார்த்து அவன் மேல அடிச்சேன், அவன் கையெழுத்து வாங்கி நகந்துட்டான், கல் வாத்தியார் நெஞ்சுல விழுந்து நல்ல அடி பாவம். அவருக்கு படபடப்போட நல்ல கோவமும், யார் அடிச்சதுன்னு கேட்டப்ப யாரும் சொல்லல. ஆல்ஃபிரெட இன்னொரு கிளாஸ்லேர்ந்து குச்சி வாங்கி வர சொன்னாரு. அதுவரை குச்சியே யூஸ் பண்ணதில்ல, நல்ல மனுஷன் பாவம். அவன் வாங்கி வந்த ஒடனே அவனுக்குத்தான் மொதோ அடி , பழைய டீ வன்மத்தை தீத்துக்கிட்டாரு போல. வரிசையா ஒவ்வொருத்தரா அடிச்சிட்டே வந்தாரு. அப்பயும் ஒருத்தனும் சொல்ல யார் அடிச்சாங்கன்னு. நான்தான் 14ஆவதா ஒக்காந்திருந்தேன். எனக்கு முன்னாடி சுந்தர்னு ஒருத்தன், கிராமத்துப் பையன் வாட்ட சாட்டமா இருப்பான். அவனை அடிச்ச ஒடனே அவன் "சார் இவன்தான் அடிச்சான்"ன்னு என்ன கைய காமிச்சிட்டான், எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி, "யூ டூ ப்ரூட்டஸ்"னு அவன ஒரு பார்வ பாத்தேன். வாத்தியார் கோவம் உச்சிக்கு ஏற, என்ன அடிக்காம வெளில போடா க்ளாஸ விட்டுன்னு தொரத்திட்டாரு, அவர் அப்படி சொல்லவும், லஞ்சுக்கு ஸ்கூல் பெல் அடிக்கவும் சரியா இருந்தது. சந்தோஷமா வெளில வந்துட்டேன்.
என்னடா இந்த எபிசோட் பூரா பிற்பாடுதானான்னு பாக்கறீங்களா. ஸ்கூல் ஃபைனல்ங்கிறதால மத்த வாத்தியார் கிட்ட எல்லாம் வாலாட்ட முடியல. இவர்தான் மாட்டினார் கைப்புள்ள. அதான்.
ஃபைனல் எக்ஸாம் வந்தாச்சு. இங்கிலீஷ் மொதோ பேப்பர். நான் நல்லா எழுதிட்டேன் ஒண்ணேமுக்கால் மணி நேரத்துல முடிச்சிட்டேன், பேப்பரை நூல் கட்ட போனேன். சடார்னு பக்கத்துல இருந்த ஜனார்தன் சிங் என் பேப்பர இழுத்துக்கிட்டான். என்கிட்டே இப்ப ஒரு பேப்பர் கூட இல்ல. வாத்தியார் பாத்துட்டா இன்ன செய்யறதுன்னு இன்னும் ரெண்டு எக்ஸ்டரா ஷீட் வாங்கினேன், அதுல அவனுக்குத் தெரியாத கேள்விகள் ரெண்டுக்கு சுமாரா பதில் எழுதி நேரத்த கடத்தினேன். அவன் எழுதி முடிச்சப்பறம், எல்லாத்தையும் ஒழுங்கா பரிமாற்றம் செஞ்சு என்னோட பேப்பர நல்லா செக் செஞ்சு கொடுத்துட்டு வந்தேன், பலர சைலண்டா அலற விட்ட என்ன அன்னிக்கு சிங் நல்லா பதற வெச்சுட்டான். இதுதானோ "பிறர்கின்னா முற்பகல் செயின்?"
இத்துடன் பால்குடி டேஸ் முடிகிறது. ஏதாவது நினைவுக்கு வந்தால் அதை தனியாக எழுதுகிறேன். மற்றபடி தருமபுரி நினைவுகள் அதே தலைப்பிலேயே அவ்வப்போது தொடரும்.
பால்குடி டேஸ் முற்றும்.
No comments:
Post a Comment