Monday, 23 October 2017

பால்குடி டேஸ் 14 - தீபாவளி ஸ்பெஷல்

"அது ஒரு கனாக்காலம்,
தீபாவளி விழாக் கோலம்"

எல்லார்க்கும் தீபாவளின்னா சின்ன வயசுல ஒரே மாதிரி அனுபவம்தான் இருந்திருக்கும். புது ட்ரஸ், டப்பாசு, வாங்கின பெருமை, முடியாதவங்களுக்கு துக்கம், பண்டிகை இல்லாதவங்களுக்கு ஏக்கம், இது மாதிரி ஒரு 3, 4 வகைல அவங்க அவங்க அனுபவத்தை அடக்கிடலாம். இதுபத்தி நெறய பேர் எழுதிட்டாங்க, எழுதறாங்க, எழுதுவாங்க. நான் எழுதப் போறது "காலேசு டேஸ்" தீபாவளி. "பால்குடி டேஸ்" தீபாவளி இல்ல.

அப்பல்லாம் ஓல்ட் SSLC முடிச்ச ஒடனே நேர காலேசுதான். PUC னுட்டு டிகிரி படிக்கறதுக்கு முன்னாடி நம்மள காலேசுன்னா என்னன்னு பழக்கப் படுத்திடுவாங்க.

இஸ்கோல்ல படிக்கறப்ப இருந்த மாதிரி, தீபாவளிக்கு இன்னும் 100 நாள், 99 நாள்னு எல்லாம் எண்ணிக்கினு இருக்க மாட்டோம். வளந்துட்டோம்ல. ஒரு பிளானிங்கும் கெடையாது. தீபாவளி வந்துச்சுன்னா, புது ட்ரஸ் மாட்டிக்கிட்டு டப்பாசு வெடிச்சுட்டு ஒரு 3 பேர் கிளம்புவோம் (நான், லட்சுமணன், கணபதி சுப்பிரமணியம்) மத்த ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு. மொதல்ல ஸ்ரீதர் வீடு. எல்லார் வீட்டுலயும் அப்பா, அம்மா எங்கள அவங்க  வீட்டு பசங்க மாதிரிதான் நடத்துவாங்க. அங்க சில பல மல்லிப்பூ இட்லிகள், தும்பைப்பூ போல தேங்காய் சட்னி முழுங்கிட்டு அடுத்து ஜீவாங்கற வெங்கட்ராமன் வீடு. அங்கேயும் இதே கதைதான், அதே காலனில  நாலு வீடு தள்ளி மோகன்ராஜ்  வீட்டுக்கு போயி அங்கேயும் இட்லி. அப்பறம், ரவிச்சந்திரன், லக்ஷ்மணன் வீடு, கணபதி சுப்பிரமணியம் வீடுன்னு எல்லார் வீட்டுலயும் இட்லி தின்னாம விட மாட்டாங்க. லக்ஷ்மணன் வீட்டுக்கு போறதுக்குள்ள ஆல்ஃபிரட்ங்கிற கிறிஸ்டியன் எங்க கூட சேந்துக்குவான். நடு நடுல சோடா குடிச்சுக்குவோம்.  இதுல நடுல யார் கண்ணுலேயாவது பட்டோம் அவ்வளவுதான். அவங்க வீட்டுலயும் இட்லி தின்னணும். இப்படி ஒரு 6, 7 வீட்டுல ஒரு த்ரீ ஹவர்ஸ்ல 50 இட்லியாவது தின்னுடுவோம் அந்த வயசு அப்படி. இப்ப நெனச்சா மலைப்பா இருக்குது. எல்லாம் முடிச்சு எங்க வீட்டுக்கு வருவோம். எங்க வீட்டுலதான் பசங்க கொஞ்சம் பயப்படாம இருப்பாங்க, ஏன்னா நாங்க இட்லி செய்ய மாட்டோம். அங்க எங்க  பிளானிங் ஆரம்பிக்கும், மேட்னி படம் எங்க, ஃபர்ஸ்ட் ஷோ எங்க பாக்கறதுன்னு. டிக்கெட் சொல்லி வெக்கறது எங்க அப்பாவோட வேல. நேர தியேட்டர் மேனஜரப் பாத்து இன்னின்ன ஷோக்கு இத்தினி டிக்கெட் வேணும், என் பையன் வருவான்னு சொல்லிடுவாரு. சில சமயம் டிக்கெட்ட அவரே வாங்கி வந்துடுவாரு. மேட்னிக்கு ஒரு 8 லேர்ந்து 10 பேர்தான் போவோம். அநேகமா, சென்ட்ரல் இல்லாட்டி கணேசா தியேட்டர்தான். எங்க தீபாவளியே சாயங்காலம் ஃபர்ஸ்ட் ஷோ ரத்னா தியேட்டர்லதான். ரெண்டு பாக்ஸ் இருக்கும். ஒவ்வொண்ணும் 24 சீட். 48யும் புக் செஞ்சுடுவோம். ஒரு 24 பியூர் எங்க கும்பல். மத்ததுல தெரிஞ்சவங்களுக்கு குடுத்துடுவோம்.

எங்களுக்கு படத்தப் பத்தி கவலை கிடையாது. ஒரே கலாட்டாதான். பட்டாசு வெடிக்க மாட்டோம் தியேட்டர்ல. ஆனா கேப் ரோல், துப்பாக்கி எடுத்துட்டு போயிடுவோம். ஹீரோவ காமிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து ஒரே கலாட்டாதான். பாட்டுக்கு டேன்ஸ். இப்படியே போகும். கிளைமாக்ஸ்ல துப்பாக்கில சுடற சீன் வந்தா, வில்லனோ, இல்ல கதாநாயகனோ மொழ நீளம் வசனம் பேசறப்ப நாங்க ஒரு 4, 5 பேர் துப்பாக்கியால டுமீல் டுமீல்னு சுட்டு, பால்கனில இருக்கற சில தாய்குலங்களுக்கு பீதிய கெளப்புவோம். (இது தாய் மீது சத்தியம் படத்தப்ப நடந்தது)

படம் முடிஞ்ச ஒடனே அவங்க அவங்க வீடுதான். எங்களுக்கு அன்னிக்கு கெடச்ச சுதந்திரத்த மதிச்சு, வீட்டுக்கு நேரத்தோட நல்ல புள்ளைங்களா வந்துடுவோம். வந்து சாப்பிட்டு எங்க தெருவுல நைட் பத்து மணிக்கு ஒரு மாபெரும் வான வேடிக்கை (வான வேடிக்கைதான்) நடத்துவோம். அதுக்கு ஒரு 5, 6 ஃபிரெண்ட்ஸ் வந்துடுவாங்க. எங்க தெரு ஆளுங்க எல்லாரும் அவங்க அவங்க வீட்டு வாசல்ல நின்னுக்குவாங்க. பக்கத்துக்கு தெரு ஆளுங்களும் வந்துடுவாங்க.

எங்க தெரு ஒரு முட்டுத் தெரு. அதுல கடைசில ஒரு டெலிஃபோன் போஸ்ட் போட்டிருந்தாங்க. ஆனா யாரும் டெலிஃபோன் கனெக்க்ஷன் கொடுக்கல. நாங்க எல்லார் வீட்டுலேர்ந்தும் சிங்கம் மார்க் டபுள் சரம் கலெக்ட் பண்ணி வெச்சிருப்போம் மொதோ நாளே. எப்படியும் ஒரு 20, 25 சரம் சேரும். அது இல்லாம ஒரு டஜன் மத்தாப்பு. அப்பிப்ராம் ரெண்டு டஜன் ராக்கெட். மொதல்ல ஒரு 6 கம்பி மத்தாப்பஒண்ணா கட்டி தலைகீழா வெச்சு அது எரிஞ்சு முடிக்கற இடத்துல டபுள் சரம் கட்டுகள ஒண்ணா சேத்து கட்டுவோம். சரம் முடிஞ்சவுடனே மீதி இருக்கற மத்தாப்பு அத்தனையும் பத்திக்கறா மாதிரி செட் பண்ணிடுவோம். அதெல்லாம் எரிஞ்சவுடனே 2 டஜன் ராக்கெட்டையும், அழகா கூம்பை கவுத்த மாதிரி கட்டி வெச்சுடுவோம்.
No automatic alt text available.

இப்பதான் ஃபைனல் டச். மாஞ்சா கயிறால இதுங்களை சேத்துக் கட்டி, நுனில ஒரு கல்ல கட்டி டெலிஃபோன் போஸ்ட்ல மேல குறுக்குக் கம்பில தூக்கி வீசி அது கீழே வந்தவுடனே, பட்டாசுல இருக்கற மத்தாப்ப பத்த வெச்சு கயிறை இழுத்து பட்டாசு எல்லாம் மேல போற  மாதிரி புடிச்சுப்போம். மொதல்ல அந்த மத்தாப்பு எரிஞ்சு, பட்டாசு எல்லாம் அந்தரத்துல வெடிக்கும். ஒரு 15 நிமிஷம் காதப்பொளக்கற சத்தம். அது முடிஞ்சவுடனே மீதி இருக்கற கம்பி மத்தாப்பு எல்லாம் எரியும் பாருங்க. ஜெகஜோதியா இருக்கும். ஹைலைட்டே கடைசில ராக்கெட் எல்லாம் வானத்துலேர்ந்து சும்மா நிலாவுக்கு போறா மாதிரி சீறிக்கிட்டு திசைக்கு ஒண்ணா பாயும் பாருங்க. எந்த வித வாணவேடிக்கையும் இதுக்கு ஈடாகாது. இதெல்லாம் எங்க சீனியர்ங்கதான் செய்வாங்க. ஏன்னா மத்தவங்க சொதப்பி ஏதாவது ஆச்சுன்னாங்கிற ஒரு தற்காப்புதான். ஒரு 5, 6 வருஷம் இதெல்லாம் நடந்துச்சு. அப்பறம் நான் 83 ல மெட்றாஸ் வந்துட்டேன். அதுக்கப்பறம் இது படிப்படியா கொறஞ்சு கடைசில நின்னே போச்சு. ஆனா ஒரு 4, 5 வருஷம் மட்டும் தீபாவளி பொங்கலுக்கு ரத்னா தியேட்டர் சினிமா மட்டும் நிச்சயம் இருந்துச்சு. எல்லாரும் கல்யாணம் ஆகாதவங்க அதுனால எந்த ஊர்ல இருந்தாலும் பண்டிகைக்கு ஒண்ணா தர்மபுரில கூடிடுவோம். ஒவ்வொருத்தரா கல்யாணம் ஆகி தர்மபுரி வர்றது கொறைஞ்சு போச்சு. அதுனால இந்த சந்தோஷங்களும் மறந்தே போச்சு. கல்யாணம் ஆனா ஆண்களும் பலத எழக்கத்தான் வேண்டியிருக்கு. என்னமோ பொம்பளைங்கதான் அவங்க சொந்தங்கள விட்டு வந்துட்ட மாதிரி சொல்றாங்க. நம்ம நட்புங்கள விட்டுப் பிரிஞ்ச வலி எங்கே புரிய போவுது?

(யாரேனும் விடுபட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும். எழுதும்போது பலவித உணர்ச்சிகள். மிகுந்த பிரயாசையுடன்தான் எழுத வேண்டியிருந்தது)


பால்குடி டேஸ் 13  - தருமபுரி நினைவுகள்.

"விளக்கெண்ணையும் வேதியியலும்"

(சிறுவயதில் வயிறு சரியாக இருப்பதற்கும், குடலிலுள்ள புழுக்களை நீக்குவதற்கும் பேதிக்கு கொடுப்பார்கள். அதை சில இடங்களில் வேதிக்கு என்று சொல்வார்கள். ஆகவே இந்த தலைப்பு)

ஜனவரில பொங்கல் முடிஞ்ச  அடுத்த ஞாயிறும், ஜூலை மாசம் கடைசி ஞாயிறு வரும்போதும், சனிக்கிழமை நைட்டே வயித்தைக்  கலக்க ஆரம்பிக்கும்.. ஏன்னா அடுத்த நாள் காலைல  வெறும் வயித்துல விளக்கெண்ணெய் தருவாங்க, அதான். குறிப்பா ஏன் இந்த ரெண்டு மாசம்னு கேக்கறீங்களா? தீபாவளி பொங்கல்னு சும்மா இஷ்டத்துக்கு பலகாரம் தின்னுருப்போம். அதெல்லாம் சரி செய்ய வேண்டாமா? அதே மாதிரி ஆகஸ்ட் பொறந்தாலே வரிசையா கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரின்னு சில பல பண்டிகைகைகள். தமிழனைப் பத்திதான் தெரியுமே! எண் ஜாண் உடம்புக்கு அவனுக்கு வயிறே பிரதானம்.

காலைல எழுந்து பல் விளக்கினவுடனே என்னோட அண்ணன் என்னை அம்மா கூப்பிடறாங்கன்னு சொல்லிட்டு நைசா திண்ணைக்கு போயிடுவான். எஸ்கேப்பாம். நமக்குத் தெரியும், இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னு. பலியாடு மாதிரி தலையாட்டிக்கிட்டே சமையல் ரூமுக்கு போவேன். எதிர்த்து ஒண்ணும் பிரயோஜனம் இல்லேன்னு தெரியும். அதுனால சமரசமா, "எனக்கு கிண்டில ஊத்திக் கொடுத்துடுங்க, நான் ஒரே மடக்குல குடிச்சுடறேன்"னு சொல்லி வாங்கி ஒரே உறிஞ்சுதான். வெளில வரும்போது மூஞ்சியை ஒண்ணும்  நடக்காத மாதிரி வெச்சுக்கிட்டு வாசல் திண்ணைல இருக்கற அண்ணன்கிட்ட போய் "நமக்கு அடுத்த வாரம்தானாம், அக்காக்கு மட்டும்தான் இன்னிக்கு, உன்னை காப்பி குடிக்க கூப்பிட்டாங்க"ன்னு  சொல்லி உள்ளே அனுப்புவேன், ஏன்னா அக்காக்கு குடுத்தது அவனுக்கு தெரியும். அவன் ஒரு சந்தேகத்தோடயே உள்ளே போவான்.காப்பி அரை கப் இருக்கறத பாத்தவொடனேயே அவனுக்குத் தெரிஞ்சுடும் இது வெளக்கெண்ணைதான்னு, ஓடப் பாப்பான். வாசல்ல எங்க பாட்டி வழியை மறிச்சி நின்னுக்குவாங்க. வேற வழியில்லாம டம்ப்ளரை கைல வாங்கி அரை டம்ப்ளர் குடிக்கறதுக்குள்ள ஆயிரம் அலப்பறை செய்வான். வாந்திவர்றா மாதிரி ஆக்ட் எல்லாம் குடுப்பான். எங்க பாட்டி கிட்டயா நடக்கும்? ரொம்ப அலட்டினா முதுகுல சுரீர்னு விழும்னு தெரியும். அதுனால ஒரு வழியா குடிச்சிட்டு, வெளில வந்து என்னைத் தேடுவான், எதுக்கு, நொங்குன்னு ஒரு கொட்டு வைக்கத்தான். அவனுக்கு எலும்பு தேகம். கொட்டினான்னா கபாலமே பொளந்துக்கறா மாதிரி கொட்டுவான். நான் நைசா பக்கத்து வீட்டு திண்ணைல போய் ஒளிஞ்சுக்குவேன். 10 நிமிஷத்துல வீட்டுக்கு வந்துதான் ஆகணும். ஒரே ஓட்டம்தான் பாத்ரூமுக்கு. போயிட்டு வந்தா அவன் எரிச்சலோடு காத்துகிட்டிருப்பான். அப்ப அடிக்க முடியாது. ஒரே ஓட்டம்தான் உள்ளே.
No automatic alt text available.

இப்படி கௌண்டமணி கணக்கா 9 மணி வரை போயிவந்து கை காலெல்லாம் வெலவெலத்துப் போயிடும். சாப்பிட எதுவும் தர மாட்டாங்க, இன்னொரு காப்பிதான். அது தேவாம்ருதமா இருக்கும் அப்ப. ஒரு வழியா ஒரு 11 மணிக்கு எல்லாம் செட்டில் ஆயிடுச்சின்னு உறுதிப்படுத்திக்கிட்டு எங்கப்பா ஒரு பெரிய செம்பு அண்டால தண்ணி எடுத்து வெயில்ல வெப்பார். அது வெய்யில்லேயே சூடேறணும். அதுல தண்ணி கலக்காம குளிப்பாட்டுவாங்க. அப்பத்தான் ஜலதோஷம் புடிக்காதாம். எப்படா 1 மணி ஆகும்னு காத்திட்டிருப்போம். அப்பவும் குளிச்சப்பறமும் ஏதாவது போனோமான்னு செக் செஞ்சிட்டுதான் சாப்பாடு போடுவாங்க. அருமையான சீரக ரசம். பருப்பு துவையல் காரம் இல்லாம. மத்த சமயத்துல செய்யற பருப்புத்துவையல் எல்லாம் எந்த மூலைக்கு. பத்தியமா போடற இந்த துவையலை ஒரு வெட்டு வெட்டுவோம்.

சாயங்காலம் ரொம்ப பசின்னா ரெண்டு இட்லி, இல்ல ஒரு தோசை, அதே பருப்பு துவையல் தொட்டுக்கிட்டு. அப்பறம் டீ இல்லாட்டா காப்பி. (வழக்கமா எங்களுக்கு காப்பி டீ கிடையாது, கஞ்சி இல்லேன்னா ஓவல்டின் தான்) அன்னிக்கு விளையாட வெளில அனுப்ப மாட்டாங்க. வீட்டுலயே தாயக்கட்டை, கேரம் போர்ட் இது மாதிரிதான். எங்க அப்பா வெளில போயிட்டு வரப்ப, பாவம் பசங்கன்னு ஜாங்கிரி, இல்லேன்னா குளோப் ஜான் (அப்படிதான் அப்பெல்லாம் சொல்லுவோம்) வாங்கிட்டு வருவாரு. ஆஹா, தீபாவளி அன்னிக்கு தின்னற இனிப்பு கூட அவ்வளவு பிரமாதமா இருக்காது.

நைட் மோர்சாதம் போடுவாங்க, அதே பருப்பு துவையலோட. எங்க வீட்டுல தினமும் தயிர் கடைஞ்சு வெண்ணெய் எடுப்பாங்க, அந்த மோர் தனி சுவைதான். சீக்கிரம் புளிக்காது. நல்லா வயிறு நிறைய சாப்பிடுவோம். எங்களுக்காக அன்னிக்கு பெரியவர்களும் பத்தியமாதான் சாப்பிடுவாங்க. அப்ப தெரியல. இப்ப நெனைச்சா சின்ன சின்னதாவும் பெருசாவும் எவ்வளோ தியாகமெல்லாம் செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஃபீலிங் வர்றதை அடக்க முடியல.

இந்த வெளக்கெண்ணெய் மேட்டர் என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்க்கு தெரியாம பாத்துக்கணும். இல்லேன்னா மறுநாள் ஸ்கூல்ல மானத்த வாங்கிடுவாங்க.

நான் 6 ஆம் கிளாஸ் படிக்கற வரை இதே கதைதான். நான் 7 ஆவது போனவொடனே எங்க அண்ணன் மெட்ராஸ் வந்துட்டான் படிக்கறதுக்கு. அக்காவும் பெரியவங்களாயிட்டாங்க. அதுனால நிறுத்தியாச்சு. இப்பெல்லாம் டாக்டர்ங்க குழந்தைங்களுக்கு இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்றதை கேட்டு இதெல்லாம் செய்யறதில்ல. அதுனாலதான் பலவித வியாதிகள்.

ஓகே மீண்டும் சந்திப்போம்.


சுதந்திர தினமும் பங்கஜமும் - தருமபுரி நினைவுகள். - 12
(நடுவில் கொஞ்சம் "பால்குடி டேஸ்" பக்கங்களிலிருந்து)

நான் 3 ஆவது படிக்கும்போது (5 ஆவது வரை இதே கதைதான்) சுதந்திர தினத்தன்று எங்கள் பள்ளியில் 7.30க்கெல்லாம் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் தந்துடுவாங்க. சட்டையில் தேசியக் கொடியை குத்திக்கிட்டு பஸ் ஸ்டேன்ட் போனாக்க, எல்லா டவுன் பஸ்லயும் கலெக்டர் ஆபீஸ் போறதுக்கு ஃப்ரீ, கலெக்டர் கொடியேத்தறத பாக்கறதுக்கு, (ஸ்கூல் புள்ளைங்களுக்கு மட்டும்தான்). ஓசில அதுவும் தனியா பஸ்ல போறோம்ன்ற ஒரு வீரம்தான்.

கலெக்டர் ஆபீஸ் போய் நாங்க பார்வையாளர் இடத்துல உக்காந்துக்குவோம். போலீஸ், ஹோம்கார்ட், என் சி சி, ஸ்கவுட் னு வரிசையா ரெடியா இருப்பாங்க. கலெக்டர் வந்தவுடனே, இவங்க எல்லாரும் ஒரு மார்ச் பாஸ்ட், செஞ்சு கலெக்டருக்கு சல்யூட் அடிப்பாங்க, எங்களுக்கெல்லாம் இதே பெரிய ப்ரம்மாண்டமா இருக்கும்.  மார்ச் பாஸ்ட் முடிச்சு கலெக்டருக்கு சல்யூட் அடிச்சவுடனே அவர் கொடியேத்துவாரு, அப்ப துப்பாக்கில 3 தடவை சுடுவாங்க, கொஞ்சம் பயமாத்தான் இருக்கும், யார் மேலயாச்சும் பட்டா என்ன ஆவுறதுன்னு. எல்லாம் முடிஞ்சு 5 பைசா பாரீஸ் சாக்லேட் தருவாங்க, சூப்பரா இருக்கும்.

இது முடிஞ்சவுடனே கலை நிகழ்ச்சிகள். மொதல்ல போலீஸ்ல ஒரு க்ரூப் கலர் கலரா வேஷ்டியை பஞ்சகச்சம் மாதிரி கட்டிக்கிட்டு மேல வெள்ளை பனியன் போட்டுக்கிட்டு, "லெசீம்" அப்படித்தான்  சொல்வாங்க - அதை தட்டிக்கிட்டு டான்ஸ் ஆடிட்டு வருவாங்க, இது தாண்டியா மாதிரி தாள நடை. ஆனா கட்டை ரெண்டும் ஒரு சின்ன சங்கிலியால ஜாயின் ஆயிருக்கும், நுனில சலங்கை கட்டியிருக்கும். (பார்க்கவும் : படம்) அதை ஷ்க், ஷ்க் னு தட்டிட்டு டான்ஸ் ஆடிட்டு வருவாங்க. போலீஸ்காரவுங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு ஆச்சரியமா இருக்கும். அது முடிஞ்சா உடனே போலீஸ் பாண்ட் குரூப் பாண்ட் வாசிப்பாங்க. தேவனே என்னைப் பாருங்கள் பாட்டு கூட வரும். (இதே போலீஸ் பெரிய அதிகாரிங்க வீட்டுல சாவுன்னா "வீடு வரை உறவு" பாட்டுக்கு பாண்ட் வாசிப்பாங்கன்றது வேற விஷயம்)
Image may contain: 8 people, people standing and outdoor  No automatic alt text available.

11 மணி வாக்குல கெளம்பிடனும். இல்லாட்டி ஃப்ரீ சேவை முடிஞ்சு போயிடும். ஒரு வாட்டி என் சித்தப்பா பையனும் கூட வந்தான் (அவனுக்கு 5 வயசுதான் இருக்கும், பூணல் போடறப்ப அடி வாங்கினானே அவனேதான்) திரும்பி வந்தவுடனே, எங்க அம்மா அவனை எப்படிடா இருந்துச்சுன்னு கேட்டாங்க, அவன், "பெரியம்மா, பெரியம்மா ஜோரா இருந்துச்சு, போலீஸ்காரங்க எல்லாம் பங்கஜத்தைக் கட்டிக்கிட்டு ஆடினாங்க"ன்னான் பாருங்க, எல்லாருக்கும் தூக்கி வாரிப் போட்டுச்சு. ஏன்னா அப்ப பங்கஜம் மாமியும் அங்க இருந்தாங்க. "என்னடா சொல்றே"ன்னு கேட்டதுக்கு "ஆமாம் பெரியம்மா, அப்பா, பெரியப்பா எல்லாம் கட்டிப்பாங்களே (அப்பவும் பொடி வெச்சே பேசறான் பாருங்க) தவசத்துக்கு" அப்படின்னு அவன் சொன்னவுடன்தான் புரிஞ்சுது அது பஞ்சகச்சம்னு, எல்லாருக்கும் நிம்மதி, பங்கஜம் மாமி பெருமூச்சு விட்டாங்க.

இப்படி போச்சு எங்க சுதந்திர தினம்.


பால்குடி டேஸ் (PAALKUDI DAYS) - 11

(தருமபுரி நினைவுகள்)

 பள்ளி திறந்து 7 ஆம் வகுப்பிற்கு போயாச்சு. நான் அப்ப்பாவு நகர் ஸ்கூல்லேர்ந்து டவுன் ஸ்கூலுக்கு மாத்திக்கிட்டேன், எனக்கும் அக்கா மாதிரி ஸ்கூலுக்கு லன்ச் கட்டித் தருவாங்கன்னு. அதெல்லாம் கெடையாது, வந்து சாப்பிட்டுப் போன்னுட்டாங்க. இங்க விளையாட மைதானம் கெடையாது. வேஸ்டு. என்ன புதுசா ஃபிரண்ட்ஸ் கெடைச்சாங்க. பார்த்தசாரதி, உதயா, பாஸ்கர் னு. இங்க குறும்பு செய்ய ஒண்ணும் வழியில்ல.  அதுனால ஸ்கூல் விட்டவுடன் வீட்டுக்கு ஓடி வந்துடுவோம். வந்து தெருல விளையாட்டு.

அந்த வருஷம் நடந்த ஒரே ஒரு இன்ட்ரஸ்டான விஷயம் பெங்களூர், மைசூர் டூர்தான். 20 ருபாய் ஆளுக்கு. 20 ரூபாய்க்கு தருமபுரிலேர்ந்து மைசூர்-பெங்களூர் பஸ்ஸுல கூட்டிட்டுப் போய், மூணு வேளை சூப்பர் சாப்பாடு ரெண்டு நாளைக்கு. 1972 ஆம் வருஷம், இப்ப முடியுமா?டூர் ரொம்ப நல்லா இருந்துச்சி. அப்பத்தான் வசந்த மாளிகை ரிலீஸ் ஆன சமயம். பஸ்சுல அந்தப் படத்தோட பாட்டுதான் திருப்பித் திருப்பி பாடிட்டுப் போனோம். மொதல்ல சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி. அங்கேருந்துதான் ஹொகேனல்லுக்கு தண்ணி வருதுன்னு சொன்னாங்க. பிரமாண்டமா இருந்துச்சு. கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு. அருளானந்தம்னு ஒரு தமிழ் வாத்தியார்தான் பொறுப்பு. அவருக்கு என்னைக் கண்டாலே என்னவோ புடிக்காது. அங்கிருந்து சாமுண்டி மலை, சிரவண பெலகோலா எல்லாம் போனோம்  அப்பா, கோமதேஸ்வரர் சிலைதான் எவ்வளோ பெருசு. அது அடில நின்னா, அதோட கணுக்கால் உயரம் கூட வரல. எல்லாம் பாத்துட்டு அன்னிக்கு எதோ ஒரு ஸ்கூல்ல நைட் ஹால்ட். நைட் சாப்பாடு ஹோட்டல்ல. சாப்பாடு எல்லாம் அருமையா இருந்தது.  மறுநாள் பெங்களூர். பெங்களூர்ல எனக்கு ஞாபகம் இருந்தது எல்லாம் கப்பன் பார்க், லால் பாக் பார்த்ததுதான். (அதைக் கூட ரொம்ப நாள் லால் பார்க்னுதான் சொல்லிட்டிருந்தோம்). அங்க கண்ணாடி மாளிகை ரொம்ப புடிச்சிருந்தது. அது லண்டன் க்ரிஸ்டல் பேலசோட மாதிரியாம்.

Image result for chamundi hills statue

நீ ஒன்னும் கலாட்டா பண்ணலியான்னு கேக்கறீங்களா? பெங்களூர்ல நைட் சாப்பிட ஹோட்டல் வாசல்ல நிக்கறப்ப பசங்க மோரிஸ் வாழைப்பழம் வாங்க வெலை கேட்டாங்க. அவன் கன்னடத்துல சொன்னான். நான் இருங்கடா, நான் பேரம் பேசறேன்னு சொல்லி, "எஷ்டு"ன்னு கேட்டேன், அவன் ஒந்து ஹத்து பைசா ன்னு சொன்னேன். நான் ஹத்து பைசாக்கு ஹத்து கொடுதியான்னு கேட்டேன். அவன் கோவம் வந்து என்னை தொரத்த நான் ஒரே ஓட்டம் நடு ரோட்ல. வாத்தியார் கிட்ட செம அடி. ரோஷம் எல்லாம் அப்பறம் வெச்சுக்கலாம்னு சாப்பாட்டை முடிச்சோம். தயிர் கட்டித் தயிர். அருமையா இருந்தது. நாங்க ஒரு நாலு பேரு சீக்கிரம் சாப்பிட்டோம். நான் வாங்கடா நம்ம பஸ்சுல போய் உக்காந்துக்கலாம்னு அவங்களைக் கூட்டிட்டுப் போயிட்டேன். சாப்பிட்டு முடிஞ்சவுடனே ஆளுங்களை எண்ணிப் பாத்திருக்கார் வாத்தியார். 4 பேர் இல்லை. ரொம்ப நேரம் தேடியிருக்காங்க. யாரோ 4 பசங்க பஸ் பக்கம் போனாங்கன்னு  சொல்லவே பஸ்சுல வந்து பாத்தா நாங்க இருந்தோம். கோவத்துல என்ன மட்டும் பின்னி எடுத்துட்டார் அருளானந்தம் சார். எனக்கு ரொம்ப அவமானமாப் போச்சு.

கைச்செலவுக்கு குடுத்த பணத்துல நான் 4 முலாம்பழம் வாங்கினேன். ஃபுட்பால் சைஸ் ஒண்ணொண்ணும். ஒண்ணு  50 பைசாதான். அதெல்லாம்  ஒரு பனியன் துணிமாதிரி ஒரு துணிலதான் கட்டித்தருவாங்க. அதை பஸ் கம்பில முடிச்சு போட்டு கட்டி வெச்சேன். அருளானந்தம் சார் ரொம்ப டயர்ட் ஆயிட்டாரு, எங்களையெல்லாம் கட்டி மேச்சு. நான் கீழே படுத்துக்கறேன்னு ஒரு துணியை விரிச்சு கீழே படுத்துட்டாரு. நல்ல தூக்கம் வேற அவருக்கு. மணி பன்னெண்டாச்சு. நம்ம வேலையைக் காட்டவேண்டிய நேரம் வந்தாச்சு. நான் கட்டித்தொங்க விட்டிருந்த 4 பழங்கள்ல அவர் தலைக்கு நேர இருக்கற ஒண்ணை அவுத்து விட்டேன். அது நல்லா பழுத்துருந்த பழம் வேற, "டிஸ்யூங்" ன்னு அவர் தலைல விழுந்து அப்படியே அவர் மூஞ்சில்லாம் அப்பிக்கிச்சு. அவர் கத்திகிட்டே எழுந்தாரு. நான் வேணும்னே பயத்துல கத்தறா மாதிரி அய்யோ பேயின்னு பலமா கத்தவே, ட்ரைவர்லேர்ந்து தூங்கிட்டிருந்த அத்தனை பேரும் அலறிட்டாங்க.  அதுல அவர் இன்னும் திகில் ஆயிட்டாரு. அப்பறம் பஸ்ஸ நிறுத்தி அவருக்கு மூஞ்சி கழுவ தண்ணி குடுத்து, ஒரு ஜன்னலோர சீட்ல தூங்க வெச்சோம். அப்பறம் நான் தூங்கினேங்கிறீங்க. மனசுக்குள்ள எம் என் நம்பியார் மாதிரி சிரிச்சிட்டே இல்ல வந்தேன் ஊருக்கு.


அதைத் தவிர வேற சுவையான விஷயம் இல்ல. அடுத்து 8 ஆவது. அதுலதான் ஸ்ரீதர் வந்து சேர்ந்தான். இன்னி வரைக்கும் தொடர்புல இருக்கற ஃ பிரண்டுல ஒருத்தன். அந்த வருஷம் எங்களுக்கு பப்ளிக் எக்ஸாம். அப்பல்லாம் அப்படிதான். எனக்கு எக்ஸாம் சமயத்துல பயங்கர டைபாயிடு . அப்பல்லாம் 45 நாள் வைத்தியம் அதுக்கு. என்னால எக்ஸாம் எழுத முடியல, ஒரு டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுத்துட்டேன். அப்ப எங்க ஃபேமிலி ஃபிரண்ட் சரோஜா டீச்சர் (Anandhakumar Mak​, YOUR MOTHER ONLY) வந்தாங்க, அவங்க கிட்ட எங்க அக்கா அண்ணன் எல்லாம் அவங்க வாங்கின சர்டிபிகேட் கப் எல்லாம் காமிச்சிட்டு இருந்தாங்க. நீ ஒண்ணும் வாங்கலியானு  அந்த டீச்சர் என்னைக் கேட்டப்ப, நான் டாக்டர் சர்டிபிகேட் வாங்கியிருக்கேன்னு சொன்ன உடனே சிரிச்சுட்டாங்க.

9 ஆவதும் அவ்வளவு சுவாரஸ்யமில்ல. என்ன பழையபடி மெயின் ஸ்கூலுக்கே போனதுதான். 10, 11 ல நடந்த சுவையான விஷயங்கள் அடுத்த பதிவில்.

(தொடரும்)