Monday, 27 March 2017

பால்குடி டேஸ் - 7 (PAALKUDI DAYS)
தருமபுரி நினைவுகள்.

4ஆவதுலேர்ந்து 5 ஆவது போயாச்சு. புதுத்துணியா? மூச்! அதான் 5 வருஷத்துக்கு வராப்பல போன வருஷமே தெச்சாச்சே. இனிமே தீபாவளி, பொங்கலுக்குத்தான். பொறந்தநாள்ங்கிற பேச்செல்லாம் அப்ப கெடையாது. அன்னிக்கு நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா ஒரு பாயசம் வெப்பாங்க. ரொம்ப அதிர்ஷ்டம் இருந்தா, சாயங்காலம், தேங்காய் பர்பி செய்வாங்க. அவ்வளோதான்.

5 ஆம் க்ளாஸ்ல கொஞ்சம் இங்கிலிஷ் நெறைய சொல்லித் தர ஆரம்பிச்சாங்க. மொதல்ல கொஞ்சம் ஜாலியாதான் இருந்துச்சி. ஆனா க்ராமர் னு சொல்லித்தர ஆரம்பிச்சாங்க (ரொம்ப பெருசா நெனச்சிடாதீங்க, இதெல்லாம் க்ராமர்ல சேத்தியான்னு இப்ப பசங்க நக்கலா கேப்பாங்க, அது மட்டுமில்ல என்னவோ அந்த காலத்துலன்னு நாங்க படிச்சப்பன்ன்னு எதுக்கெடுத்தாலும் சொல்வீங்களேன்னு மானத்தை வேற வாங்குவாங்க)

I, HE, SHE எல்லாம் சொல்லித்தர ஆரம்பிச்சாங்க (மெய்யாலுமே அப்பத்தான் சொல்லித் தர ஆரம்பிச்சாங்க, அதுவரை RHYMES தான்). ஓகே I னா நான், HE னா அவன், SHE னா அவள் அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்ததுதான் மண்டை காய ஆரம்பிச்சிச்சு. GENDER - பால் - சொல்லித்தர ஆரம்பிச்சாங்க. நமக்கு தமிழிலேயே, ஆண்பால், பெண்பால், பலவின்பால் புரியல, இதுல இங்கிலீஷிலே வேறயா? நமக்கு தெரிஞ்சதெல்லாம் பசும்பால், எருமைப்பால் தான். (அப்ப ஆவின் பால் எங்க ஊர்ல கெடையாது)

HE - ஆண்பால், SHE - பெண்பால்ன்னு சொன்னாங்க, சரின்னு சொன்னோம். அடுத்தது. HIS  (அவனுடைய), அதுக்கு அவளுடையன்னு சொல்ல HER ன்னாங்க. என்னடாதுன்னு யோசிச்சோம். துளியும் யோசிக்க விடாம  HIM க்கும் HER தான்னு சொன்னாங்க. இதுல YOU பரவாயில்லை. அதுக்கு YOUR தான், கொஞ்சம் நியாயம் இருக்கு. அப்ப என்னுடையன்னு சொல்ல என்னன்னு  கேட்டேன் டீச்சர் கிட்ட. MY ன்னு சொன்னாங்க. அடுத்து என் புத்திசாலித்தனத்தை டீச்சர்கிட்ட காட்டினேன் பாருங்க, டீச்சர் அசந்து போயிட்டாங்க. அப்ப பொண்ணுங்க எல்லாம் MY க்கு பெண்பால்ல என்ன சொல்வாங்கன்னு கேட்டேன். நல்ல வேளை அந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க. அடிக்கல்லை திட்டலை, சிரிச்சுட்டாங்க, அதுக்கும் MY தான் னு சொன்னாங்க. அது எப்படின்னு கேட்டதுக்கு, அதெல்லாம் அப்படிதான், உனக்கு அப்பறம் புரியும்னு ஒக்காத்தி வெச்சுட்டாங்க. நல்ல வேளை. க்ளாஸ்லயே நானும் சுப்ரமணியும்தான் இங்கிலீஷிலே கிங்கு. அதனால மத்தவங்க புரியாம பாத்துட்டிருந்தாங்க.

சரி போனாப் போவுது, டீச்சர் சொன்னாங்களேன்னு அதை அப்படியே மனப்பாடம் பண்ணோம். ஆனா அடுத்து தொடர்ந்து வெடிகுண்டு போட ஆரம்பிச்சாங்க. ஒருமை பன்மை இங்கிலீஷிலே சொல்லித்தர ஆரம்பிச்சாங்க (அப்பல்லாம் இங்கிலீஷ தமிழ்லதான் சொல்லித் தருவாங்க, 11ஆம் வகுப்பு வரை அப்படிதான்) மொதல்ல SINGULAR ஓட S சேத்தா PLURAL னு சொல்லித்தந்தாங்க,  BOY, BOYS, GIRL, GIRLS, TOY, TOYS, எல்லாம் ஓகே, HOUSE, HOUSES அப்படின்னு சொன்னாங்க, ஆனா ,MOUSE க்கு MOUSES இல்லையாம், MICE ஆம். இது போல இன்னும் நெறய கொளறுபடி. HE க்கு HIM நா SHE க்கு SHIM தானே! HER ஆம். சத்தியமா பொண்டாட்டி சோறுபோடாத தொரத்தி விட்ட எவனோதான் இங்கிலீஷ கண்டு பிடிச்சிருக்கணும். மத்தவங்க திண்டாடட்டுமுன்னு.

மனசத் தேத்திக்கிட்டு சொல்லித்தந்ததை அப்படியே நெட்டுரு போட்டோம். திடீர்னு எனக்கும் சுப்ரமணிக்கும் ஒரு டவுட்டு. A, B, C, D மொத்தம் 26 எழுத்துன்னு தெரியும். ஆனா நமக்கு அத்தனையும் தெரியுமான்னு ஒரு சந்தேகம். சரின்னு சொல்லிப் பார்த்தோம். எத்தனை தடவை சொன்னாலும் 22 தான் வந்துச்சு, அசிங்கமாய் போயிடுச்சி, சரி இப்படியே விட்டுடக் கூடாதுன்னு அன்னிக்கே ரெண்டு பேரும் வீட்டுல கட உரு அடிச்சோம். (அடிச்சதுல இன்னி வரை மறக்கலேன்னா பாத்துக்கங்களேன்) அப்பறம்தான் நிம்மதி ஆச்சு.

இப்படியே நல்ல புள்ளையா ஸ்கூல்ல படிப்பு, வீதில வெளையாட்டுன்னு போயிட்டிருந்துச்சி. அப்ப வீதில டயர் ஓட்டுவோம். அதை வீட்டுக்குள்ள வெக்க எங்க பாட்டி விட மாட்டாங்க. அவ்வளோ ஆச்சாரம். அதுனால அதை பக்கத்து வீட்டு ஓட்டு மேல  போட்டு வெப்போம். அவங்க வீட்டு ஓடு கொஞ்சம் தாழ்வா இருக்கும் சுலபமா எடுத்துடலாம். ஒரு நாள் அப்படி போட்டுட்டு, அவங்க வீட்டு ஜன்னல்லேர்ந்து கீழே இறங்கறப்ப கால் தடுக்கி விழுந்து வலது கை  மணிக்கட்டுக்கு மேலே உடைஞ்சு போச்சு, அப்படியே Z  மாதிரி ஆயிடுச்சி. சரியான வலி, வீட்டுல அப்பா, அம்மா கடைக்கு போயிருந்தாங்க  நான் எங்க அக்கா, அண்ணன் 3 பேர் மட்டும்தான் இருந்தோம். அண்ணன் எங்க அப்பா அம்மாவை கூப்பிட போயிட்டான். பாவம் எங்க அக்கா என் கைய புடிச்சிட்டே அழுததுட்டு  இருந்தாங்க. (ரொம்ப பாசம் ஜாஸ்தி, இன்னும் அப்படிதான், அண்ணன் வேற டைப், நான் இழுத்து விடற சண்டைல எல்லாம் அடி வாங்கிட்டு நிக்கற வீர ஜாதி அவன்).
Image result for டயர்  ஓட்டும் சிறுவர்கள்


Image may contain: drawing

அப்பா வந்து டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க, (ஹை, குதிரை வண்டில, ஹை ஹைன்னு போனேன்). அப்பல்லாம் இது மாதிரி பிளாஸ்டர் ஆஃப்  பாரிஸ் ரெடிமேடா கெடைக்காது. டாக்டர்தான் மெடிக்கல் ஷாப்ல பௌடர் வாங்கி வந்து அப்பப்ப தயார் செய்யணும். அதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்ன்றதால டாக்டர் ஒரு அட்டைப்பெட்டியை பிரிச்சு, ஒரு மர ஸ்கேல் வெச்சு ஸ்ட்ரெயிட்டா கட்டுப் போட்டு அனுப்பிச்சிட்டாரு. அப்பறம் ராத்திரி 9 மணிக்கு வரச்சொல்லி, மாவுக்கு கட்டு போட்டு அனுப்பினார், 45 நாள் கழிச்சுத்தான் பிரிக்கணும்னு சொல்லிட்டாரு, ஆனா, ஸ்கூல் 3 நாள்தான் லீவு போட முடிஞ்சுது, ஸ்கூல்ல என்னை மட்டும் தனியா ஒக்கார வெச்சுட்டாங்க (ஒரு ரெண்டு 3 பொண்ணுங்க என்னை பரிவா பாத்தது வேற விஷயம்).

டீச்சர் சொல்லிட்டாங்க, நீ இந்த சமயத்துல கணக்கு நல்லாக் கத்துக்கணும். அப்பத்தான் பாஸ் போட முடியும், இல்லேன்னா ஆறாவது போக முடியாதுன்னு. சரின்னு கஷ்டப்பட்டு நல்லாக் கத்துக்கிட்டேன். கை சரியாகவும் கொஞ்ச நாள்ல முழுப் பரீட்சை வரவும் சரியா இருந்ததால ஸ்கூல்ல படிப்புலதான் கவனம், வேற ஒண்ணும் குறும்புக்கு வழி இல்ல. வீட்டுலயும் வெளில விளையாட விடல, கை ஒடிஞ்சு அப்பத்தான் சரியானதால. சரின்னு படிப்புல கவனம் செலுத்தி 5 ஆவது பாஸ் செஞ்சோம்.

அடுத்து 6ஆவது. ஹைஸ்கூல் போறோமில்லை.
(தொடரும்.) 

Wednesday, 22 March 2017

பால்குடி டேஸ் -6 (PAAL KUDI DAYS)
தருமபுரி நினைவுகள்.

ஹா, நாலாம் நாலாம் திருநாலாம்னு நாலாம் க்ளாஸ் போயாச்சு. முதல் நாள், லீவில் அப்பா தைத்து தந்திருந்த டிரௌசரா இல்லை மாவு மெஷினுக்கு மாட்டுற துணியான்னு கண்டே புடிக்க முடியாத மாதிரி ஒரு ட்ரஸ் மாட்டிக்கிட்டு சந்தோஷமா போனேன். (தருமபுரி ஸ்டோர்ஸ், இல்லேன்னா துரை துணிக்கடைலதான் துணி எடுப்பாரு. வாசல்லயே தையல் மெஷினோட உக்காந்திருக்கற சுந்தரம்தான் எங்கள் ஆஸ்தான டைலர். அவர் தைக்கறதே ரொம்ப நீளமா இருக்கும், இதுல எங்க அப்பா வளர்ற பசங்க இன்னும் கொஞ்சம் லெங்த் வைன்னு சொல்லிடுவார், இதுல லூசா வேற இருக்கும். அரணாக்கயிறை டிரௌசர் மேல விட்டுக்கிட்டு சட்டையை அதுமேல மூடி மறைச்சுக்குவோம், பெர்முடாஸ் கண்டு பிடிச்சது அமெரிக்காக்காரன் இல்ல, எங்க ஊரு சுந்தரம்தான். எங்க ஊருக்கு தேரு பாக்க வந்த ஒரு அமெரிக்காக்காரன் அதை காப்பி அடிச்சு ஒரு ஃபேஷனா மாத்திட்டான்).

அன்னிக்கு நிஜமாவே திருநாள்தான். க்ளாஸ் ஆரம்பிச்ச. கொஞ்ச நேரத்துல B உஷா ராணின்னு ஒரு பொண்ணு சேந்துச்சு (என்ன ஒரு ஞாபக சக்தி!). அதுவரைக்கும் இருந்த,அமுதா, ராதிகா, மஞ்சுளா எல்லாம் ஓரம் கட்டிட்டாங்க எங்க பசங்க. க்ளாஸ் முழுக்க அந்தப் பொண்ணைப் பத்தித்தான் பேச்சு. ஒரு ரெண்டு நாள் ஸ்வாரசியமா போச்சு.

நாலாம் க்ளாஸ் தான் என் பால்குடி டேஸிலேயே நான் மறக்கற விரும்ப ஒரு காலம். செய்யாத தப்புக்கெல்லாம் அடி வாங்குவேன். அந்த டீச்சரும் எங்களுக்கு தெரிஞ்சவங்கதான். அவங்களுக்கு என்மேல ஏதேனும் வெறுப்பா, இல்ல எங்க குடும்பத்து மேலேயே வெறுப்பான்னு தெரியல, யாராவது என்னைப் பத்தி எது சொன்னாலும் அடி பேத்துடுவாங்க. அதுனாலயே அவங்களைக் கண்டா வெறுப்பாயிடும். இப்ப மாதிரி தமிழுக்கு ஒரு டீச்சர், கணக்குக்கு ஒரு டீச்சர்னு எல்லாம் அப்ப கெடையாது, ஒரே டீச்சர்தான், அவங்களைக் கட்டிக்கிட்டுதான் அழணும் நாள் பூரா. ரொம்ப கஷ்டமான காலம் அது. சோதனையா உடம்புக்கு வேற எதுவுமே வரல லீவு போடவும் முடியாம.

இதுல இன்னொரு சோதனை. கொஞ்சம் மொரட்டுப் பசங்க எல்லாம் வந்து சேந்தாங்க. எல்லாரும் எம் ஜி ஆர் ரசிகங்க. அதுவரைக்கும் என் கூட நல்லபடி பழகிட்டிருந்த சில நண்பர்கள் அவங்க கூட சேந்துட்டாங்க. அவங்களும் எம் ஜி ஆர் ரசிகங்க. டெயிலி இடைவேளைல என்னை செவுத்துல சாய்ச்சிப் புடிச்சுக்கிட்டு சிவாஜி ஒழிக, எம்ஜியார் வாழ்க ன்னு சொல்ல சொல்லுவாங்க, நான் சிவாஜி வாழ்கன்னுதான் சொல்லுவேன். உடனே குத்தோ குத்துன்னு குத்துங்க. வலி தாங்க முடியாது. ஆனா சின்ன வயசுலேயே எனக்கு வீம்பு ஜாஸ்தி. எத்தனை குத்தினாலும் சிவாஜி வாழ்கன்னுதான் சொல்வேன். இதனாலேயே நான் தீவிர சிவாஜி பக்தன் ஆயிட்டேன். (இந்த தொல்லை 8 ஆம் க்ளாஸ் வரை தொடர்ந்தது. எட்டாவதுல இது மாதிரி என்னை அடிச்சப்ப நான் கோபம் வந்து ஒரு பெரிய பையனை தலைக்கு மேலே தூக்கி ரெண்டு சுத்து சுத்தி ஸ்டேஜிலேர்ந்து கீழே விசிறி எறிஞ்சேன், அந்த பையனுக்கு இடுப்புல நல்ல அடி. அதுலேர்ந்து யாரும் நம்ம கிட்ட வம்பு வெச்சிக்கிறதுல்ல)
அண்ணாதுரை , எம் ஜி ஆர் என்று வகுப்புல பயங்கர போட்டி நடக்கும். நான் என்ன அடி வாங்கினாலும் சரின்னு
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
அப்ப தமிழகத்துல தீவிர அரசியல் மாற்றம் வந்த சமயம். காமராஜர், சிவாஜி - எம்ஜியார் சிண்டு பறக்கட்டுமே
காமராஜர் பார்த்து சிரிக்கட்டுமே
அண்ணாதுரை பார்த்து அழுகட்டுமே "

என்றும். பிறகு "ஆமவடை, உளுத்த வடை, அண்ணாதுரை பல்லை உடை" என்றும் கோஷம் எழுப்புவேன், அடி தாங்காது. எதையும் தாங்கும் இதயம் நமது. (எம்ஜியார் மற்றும் அண்ணாதுரை நண்பர்கள் மன்னிக்கவும்,இது சிறுவயதில் நடந்தது,அதே போல் அவர்களும், எம்ஜியாருக்கு பதில் சிவாஜி என்றும் அண்ணாவுக்கு பதில் காமராஜர் என்றும் பாடுவார்கள்)
No automatic alt text available.

கொஞ்சம் குறும்பு செய்ய முடியல, ஏற்கெனவே அடி தானா விழும்.. கொஞ்சம் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்துச்சி. வாய்ப்பாடு 16 வரை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும், அதில் 13 ஆம் வாய்ப்பாடு எப்பவுமே தகராறுதான். அப்படி இப்படி அரசியலும் (!) படிப்புமா வாழ்க்கை ஓடிட்டிருந்தப்ப ஒரு நாள் என்னை ஸ்கூல் டேல வேஷம் கட்ட செலக்ட் பண்ணாங்க. எல்லா மாநில மக்கள் மாதிரி வேஷம் கட்டணும். நமக்கு காஷ்மீர். ஒரு பைஜாமா ஜிப்பா மாட்டி, ஸ்வெட்டர் போட்டு காஷ்மீர்வாசியா மாத்தினாங்க. அதுல என்ன பெருமைன்னு கேக்கறீங்களா? கூட ஜோடி மஞ்சுளா. நெஜமாவே மஞ்சுளா மாதிரியே இருக்கும். (நம்ம கலையுலக ஆர்வத்திற்கு இது ஒரு என்ட்ரினு நினைச்சுக்கிட்டு தலைவர் சிவாஜி கணேசனை மனசுல கும்பிட்டுக்கிட்டு தயாரானேன்). எதாவது நடிக்கவோ, பேசவோ பாடவோ சொல்லுவாங்கன்னு பாத்தா, "காஷ்மீர்" னு சொன்னவொடனே போய் நிக்கணுமாம். அதுக்கு ஒரு பெல்ட் ப்ரைஸ் தந்தாங்க (அது டிரௌசர இறுக்கிக் கட்ட யூஸ் ஆச்சுன்றது வேற விஷயம்) நம்ம நடிப்பு ஆர்வம் அப்பவே புஸ்ஸ்ன்னு ஆயிப்போயிடுச்சி. சரி, பின்னாடி நிஜ மஞ்சுளாகூட நடிப்போம்னு மனச தேத்திக்கிட்டேன். (நல்ல வேளை, நடிக்க வரலைடா சாமி, தப்பிச்சேன்)

இங்க இன்னொன்னு கண்டிப்பா குறிப்பிட்டே ஆகணும். அப்பத்தான் மொதமொதலா வெங்கடராமன் என்கிற ஜீவாவை பாத்தேன். எங்க ஸ்கூல்ல 8ஆம் க்ளாஸ் டீச்சரா இருந்த ஜெயலக்ஷ்மி டீச்சரோட பையன். அப்பாவு நகர் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தான். டீச்சர் பையன்கற பந்தாவோட எங்க ஸ்கூல் டேக்கு வந்தான். என்ன பந்தா. (இருடி, அப்பறம் கவனிச்சுப்போமில்ல)

இப்படியே அரசியலும் அடிதடியுமா காலத்தைஓட்டி 4 ஆவது ஒரு வழியா முடிச்சோம். அப்பறம் அஞ்சாவது பாப்போம்.
(தொடரும்).

பால்குடி டேஸ் - PAAL KUDI DAYS
தருமபுரி நினைவுகள் - 5
(இரண்டு வாரங்கள் விடுபட்டதற்கு மன்னிக்கவும். உடல்நிலை காரணமாக எழுத இயலவில்லை)

மூணாம் க்ளாஸ் போயாச்சு. புதுசு புதுசா பாடங்கள். A, B, C, D சொல்லித் தர ஆரம்பிச்சாங்க. (அப்பல்லாம் மூணாம் கிளாஸ்தான் சொல்லித்தர ஆரம்பிப்பாங்க, அது வரை தமிழ்தான். இது ஒரு நல்ல முறை தாய் மொழியை நன்கு கற்பதற்கு. இதில் பலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். எந்த மொழியையும் எவ்வயதில் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் தாய் மொழி தாய்ப்பால் போல், சிறுவயதிலேயே கற்றுக் கொண்டு விட வேண்டும்.) HOT CROSS BUNS, DING DONG BELL RHYMES எல்லாமே மூணாம் கிளாஸ்லதான். 🤔. கொஞ்சம் ஜாலியாதான் இருந்தது.

ஒரு வாரம் போனவுடனே கணக்கு டீச்சர் பெரிய குண்டு போட்டாங்க. வகுத்தலாம், பெருக்கலாம். அது வரை கூட்டிக் கழிக்கவே பெரும்பாடு. இதுல ஈவு இரக்கமே இல்லாம, வகுத்தல்ல ஈவு, மீதி ன்னு எல்லாம் வேற எழுதணும். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு, கழித்தல்லயும் கடன் வாங்கிக் கழிக்கணுமாம். (அப்பவே கடன் வாங்கப் பழக்கி விட்டாங்க) இதுல சரித்திர பூகோளம்ல வர பாடங்கள் அதிகம் ஆகி, உலகமே தரித்திர பூலோகம் ஆச்சு. கிங் சாலமனாம். யாருக்கு வேணும். உள்ளூர் அரசரைப் பத்தியே தெரியாது நமக்கு.

அப்ப தர்மபுரில சர்க்கஸ் நடந்திட்டிருந்துச்சி. டெய்லி காலைல சர்க்கஸ் யானைங்க மேல ஊர்வலமா விளம்பரம் செஞ்சுட்டு வருவாங்க. எங்க ஸ்கூல்ல பின்பக்கம் காம்பௌண்ட் ஓரமா நெறைய வாழை மரம் இருக்கும். அப்படி ஊர்வலம் வந்தப்ப யானைங்க குஷியாகி ரோட்லேர்ந்தே வாழைமரங்களை முறிச்சு தின்ன காம்பௌண்ட் செவுரு இடிஞ்சு விழுந்துடுச்சி. அதுக்குள்ளே யானைகளுக்கு மதம் புடிச்சுடுச்சுன்னு பீதியை கிளப்பி விட்டாங்க. எல்லாரும் டீச்சரங்க உட்பட நடுங்கிக்கிட்டு உக்காந்திருந்தோம். ஒருத்தருக்கும் முன்வாசல் வழிய வெளிய போகணும்னு தோணல. அங்கேயும் யானை வந்துடுச்சுன்னா. இதுல களேபரம் ஒரு குட்டி யானை செய்ஞ்சதுதான். குஷில அது ஸ்கூல் கிரௌண்ட்ல அங்கேயும் ஓடி ஆடி விளையாடவே எல்லாரும் விநாயகர் துதிதான். பாலா டீச்சர்னு ரெண்டாம் க்ளாஸ் டீச்சர் ஒருத்தவுங்க என்னதான் ஆவுதுன்னு பாக்க போனாங்க. அவங்க ரொம்ப தாட்டியான ஆளு, சரீரமும் சாரீரமும் கனம்தான். அதுக்குள்ளே யானைங்க டிஃபனை முடிச்சுட்டு போயிட்டுதுங்க. பாலா டீச்சர் வந்து யானைங்க எல்லாம் போயிட்டுதுங்க, எல்லாரும் வீட்டுக்கு போலாம்னு சொன்னாங்க. உடனே எல்லாரும் பாலா டீச்சரைப் பாத்து யானைங்க பயந்து ஓடிடுச்சுங்கன்னு நெனைச்சு அவங்க மேல ஒரு பயம் கலந்த ஒரு மரியாதையே வந்துடுச்சி. ரொம்ப நாள் அதை வெச்சு யாரையாவது மெரட்டணும்னா, "ஒழுங்கா இருக்கிறியா, இல்ல பாலா டீச்சர கூப்பிடவான்னு மத்த டீச்சருங்கல்லாம் சொல்லுவாங்கன்னா பாத்துக்கங்களேன்.

மூணாவது படிக்கும்போதுதான் எனக்கு டைஃபாயிடு வந்துச்சு. அப்பல்லாம் இப்ப மாதிரி ஒரே ஊசில சரியாகாது. 45 நாள் வைத்தியம் பாக்கணும். (45 நாளும் லீவுதான் ஸ்கூலுக்கு). வீட்டுலயும் ராஜ மரியாதை, தினமும் எனக்கு ஒரு கேக்கு. தனி கவனம்னு வாழ்க்கை நல்லாவே ஓடிச்சி. கனக்குப் பாடங்களிலேர்ந்து விடுதலை. பின்ன எப்படி பாஸ் பண்ணினேன்னு கேக்கறீங்களா. டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்குடுத்து ஒரு வழியா மூணாம் க்ளாஸ் பாஸ் பண்ணிட்டோம். லீவுல எங்க பாட்டி எனக்கு கணக்கு புரியறா மாதிரி சொல்லிக் கொடுத்தாங்க. லீவு முழுக்க கணக்கு பிராக்டீஸ்த்தான்.

லீவுக்கு மெட்றாஸ் போலாம்னாங்க, ரயில்ல. அது வரைக்கும் ரயில சினிமாவுலதான் பாத்திருந்தோம். மொத மோதலா நேர்ல பாக்கப் போறோம்ங்கிற ஆவலும், கூடவே பயமும். தர்மபுரிலேர்ந்து மொரப்பூர்னு ஒரு ஸ்டேஷன் போய் அங்கிருந்து ஒலவக்கோடு பாசஞ்சர் புடிக்கணும், மொரப்பூர்ல 4 மணிக்கு ஏறினா மறுநாள் காலைல 7 மணிக்கு மெட்றாஸ். அவ்வளோ வேகம். (இப்ப கோவை எக்ஸ்பிரஸ் 4 1/2 மணி நேரத்துல போயிடும். அப்ப அதோட வேகத்தைப் பார்த்துக்குங்க). பெருமை தாங்கல, எல்லார்கிட்டயும் ஜம்பம் அடிச்சுக்கிட்டேன் நாங்க மெட்றாஸ் போறோம்னு. (இந்த காலத்துல புள்ளைங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு போவுதுங்க).

ஒரு வழிய மெட்றாஸ்ல அத்தை வீடு வந்து சேந்தோம். வந்தவுடனே பெருசா ஒன்னும் தோணல. தருமபுரி இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா எப்படி இருக்குமோ அப்படிதான் தோணிச்சு. இங்கயும் ஸ்டோர் வீடுங்கதான். (எங்க தருமபுரில பெருசு பெருசா வீடுங்க அப்படின்னு அங்க ஜம்பம் அடிச்சுக்கிட்டோமில்ல). வாழ்க்கைல மொத மொதலா தண்ணி அடிக்கற பம்பு பாத்தேன். விளையாட்டா அதுல அடிக்கடி தண்ணி அடிக்கப் போயி, டெயிலி என்ன தண்ணி அடிக்க வெச்சுட்டாங்க. அத்தை வீட்டுல அவங்க பசங்க எல்லாம் ரொம்ப பெரியவங்க. கடைசி பையனே டிகிரி படிச்சிட்டிருந்தா பாத்துக்கங்களேன். அதுனால ரொம்ப இன்டெரெஸ்ட்டா அங்க ஒன்னும் இல்ல.

மூணு நாலு நாள் கழிச்சு எங்க பெரியம்மா வீட்டுக்கு போனோம். அங்க கொஞ்சம் ஜாலியா இருக்கும். வெளில எல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. ஜூ கூட்டிட்டு போனாங்க. அப்ப எங்க சித்தப்பாவும் வந்திருந்தார் அங்க. ஜூல மனுஷக்குரங்கு இருக்கற இடத்துல நெறய கூட்டம். ஒரு சேட்டுப்பையன் அதை சீண்டிக்கிட்டே இருந்தான். அது மௌனமா இருந்துச்சு. ஒரு கட்டத்துல தொல்லை தாங்காம போயி அது ரெண்டு கையையும் பின்னாடி கட்டிக்கிட்டு கூண்டுக்கு அந்தப் பக்கமா போயி நின்னு திரும்பி அவனை பாத்துச்சு. திடீர்னு வேகமா ஓடி வந்து புளிச்சுனு எச்ல்சி துப்பிச்சு பாருங்க அவன் மூஞ்சில, ஏறக்குறைய 1/2 லிட்டர் எச்சில் வழிஞ்சிச்சு அவன் மூஞ்சில, எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சிட்டாங்க, அவனுக்கு அவமானமா போயிடுச்சி.எச்சிலை தொடைக்கறதா, இல்ல மூஞ்சில வழியற அசடைத் தொடைக்கிறதான்னு புரியாம அவன் நடந்து போயிட்டான். நானும் சிரிச்சிக்கிட்டே திரும்பிப் பாத்தா எங்க மனுஷங்க ஒருத்தரையும் காணோம். ஒரே அழுகை எனக்கு, எங்க சித்தப்பா பேரும், கூட்டிக்கிட்டு போன எங்க பெரியம்மா பையன் பேரும்தான் தெரியும். அட்ரஸ், ஏரியா பேர் ஒன்னும் தெரியாது. ஆனா அப்பல்லாம் நல்ல மனுஷங்க நெறைய பேர் இருந்தாங்க. என்னைக் சமாதானப்படுத்தி தண்ணி கொடுத்து, இரு கண்டுபுடிச்சிடலாம்னு சொல்லிட்டிருந்தப்ப என்னோட சித்தப்பா என்னைத் தேடிட்டு வந்துட்டாரு. ஒரு கையால என்னை தூக்கி முதுகுல ஒரு அறை விட்டாரு பாருங்க. எனக்கு அழறதைவிட, "அப்பா, நம்ம மனுஷங்க நம்மளைக் கண்டுபுடிச்சிட்டாங்க"ங்கற ஆனந்தம்தான். (இவங்க நம்மளை கவனிக்காம விட்டுட்டுப் போயி அதுக்கு நம்மளை அடிக்கற பெரியவங்க உலகமடா சாமி இதுன்னு அப்ப நினைச்சுக்கிட்டேன்.)
No automatic alt text available.

அப்பறம் எங்க அப்பா வந்து பீச், எலெக்ட்ரிக் ட்ரெயின் எல்லாம் காமிச்சு, ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. ஆனா மெட்றாஸ் வெயில் தாங்காம என் மூஞ்சி பூரா கட்டி. இந்த மெட்ராஸ்ல நாய் கூட குடியிருக்காது. நம்ம செத்தாலும் மெட்றாஸ்ல மட்டும் குடியிருக்கக் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்துக்கிட்டோம் நாங்க சிஸ்டர் பிரதர்ஸ் எல்லாம்சேந்து (நம்ம நெனைச்சது எங்க நடக்குது)

நாலாம் க்ளாஸ் கதையை அடுத்த வாரம் பாப்போம்.
(தொடரும்)


பால்குடி டேஸ் (PAAL KUDI DAYS)
தருமபுரி நினைவுகள் - 4

ஒரு வழியா ரெண்டாம் க்ளாஸ் பரீட்சை எழுதி முடிச்சாச்சு. லீவுக்கு திருச்சி போனோம். திருச்சில எங்க சித்தி வீடு. சித்தியை விட எங்க சித்தப்பாக்காகவே நாங்க அங்க போவோம். நல்ல வாட்ட சாட்டமான ஆளு. பயங்கர கோவக்காரர். ஆனா பாசம் ஜாஸ்தி அதை விட. "ரமணி பாய்" அப்படின்னு கூப்பிடுவாரு என்ன. அவங்க இருந்தது பாலக்கரைல பிரபாத் டாக்கீஸ் கிட்ட ஒரு வளைவு, அதுக்குள்ளே போனா, ஸ்டீம் பீடி கம்பெனி ஓனர் கட்டிவிட்ட ஸ்டோர் மாதிரி குடித்தனங்கள் ஒரு நாலஞ்சு. அதுல இவங்க இருந்த ஸ்டோர் "நானா முனா ஸ்டோர்" னு 12 குடித்தனங்கள் இருந்த ஒரு ஸ்டோர், உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையோரமா.

வாசக்கதவு திறந்தவுடன் ஒரு நடை. அங்க மாடிப்படி இருக்கும். நடையைத்தாண்டி வீடுங்க ஒரு சதுர வடிவுல வரிசையாக் கட்டியிருப்பாங்க, ஒவ்வொரு வீடும் ஒரு கூடம், ஒரு சமையல் ரூம். அவ்வளோதான். வீடுகளுக்கு மத்தியில பெரிய சதுர வடிவுல தாவாரம். அந்தத் தாவரத்து மத்தில ஒரு பாத்ரூம் லேடீஸ் குளிக்க. பக்கத்துல கிணறு. 10 அடி ஆழத்துல தண்ணி இருக்கும் எப்பவுமே. ஜென்ட்ஸ் எல்லாம் குளிக்க அந்த கிணத்தடிதான். டாய்லெட் ஜெண்ட்ஸ்க்கு ஒண்ணு, லேடிஸ்க்கு ஒண்ணுன்னு தனித்தனியா (அதுக்கு மேல விவரம் வேண்டாம்).

எங்க சித்தப்பாவுக்கு நாலு பசங்க. ஒரு பொண்ணு இருந்தது.. பேரு சித்ரா. (நான் அதை ஒத்தைக் கையால தூக்கிட்டு ஓடுவேன். பாவம் ஆறு மாசத்துலேயே செத்துப் போச்சு). நாங்க மூணு பேரும் அவங்களோடசேந்தாலே ஒரு பட்டாளம் ஆயிடும். அது தவிர ஸ்டோர்ல மத்த குடித்தனங்கள்ல இருக்கற வாண்டூஸ் எல்லாம் சேந்து ஒரு 15 பேர்க்கு மேல தேறும். மெஜாரிட்டி ஜெண்ட்ஸ்தான். விளையாட வெளிய எங்கயும் போக வேண்டாம். உள்ளேயே எங்க அட்டகாசம் தாங்காது. இதுல பெரிய மொட்டை மாடி வேற. காலம்பற சாப்பிட்டப்பறம் ராத்திரி வரை ஒரே கூத்துதான்.

11 மணி ஆச்சுன்னா பெரியவங்க செத்த கண்ணசந்த நேரமாய் பார்த்து நைசா உய்யக் கொண்டான் வாய்க்கால்ல குளிக்க கெளம்பிடுவோம். வீட்டுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க. அப்பல்லாம் வாய்க்கால்ல நெறைய தண்ணி ஓடும். (இப்ப அது திருச்சிக்கு ஒரு கூவம் ஆயிடுச்சு) ஒரு ஒண்ணரை மணி நேரம் ஒரே கும்மாளம்தான். 12.30க்கு எங்க சித்தப்பா வரதுக்குள்ள திரும்பி வந்துடணும். அவர் பாத்துட்டார்னா முதுகு பழுத்துடும். யார் வீட்டுப் பையனா இருந்தாலும் சரி. குளிச்சிட்டு வந்து தாவாரத்துல ஒணத்திருக்கிற துண்டை ஏதாவது ஒண்ணு எடுத்து பாத்ரூம்ல போய் தொடைச்சிக்கிட்டு சைலண்டா வீட்டுக்குள்ள போயிடுவோம், விளையாடிட்டு வந்த மாதிரி.

லேடீஸ் சில்ட்ரன் இது மாதிரி வாய்க்கால்ல விளையாட முடியாது (அவங்களுக்கு தொடப்பக்கட்டை பிஞ்சிடும்) அவங்கள்லாம் மொட்டமாடில நின்னுக்கிட்டு வாய்க்காலை வேடிக்கை பாத்திட்டிருப்பாங்க. அங்கிருந்து தண்ணில கல் போட்டு வெளையாடறதுதான் அவங்க விளையாட்டு. ஒரு தடவ அப்படி வெளையாடிட்டிருக்கறப்ப எங்க அக்கா சின்ன கல்லு கிடைக்காம ஒரு பெரிய செங்கல், பாதியா அங்க இருந்தத தூக்கி தண்ணில போட்டாங்க, அப்பதான் ஒரு ஆளு தண்ணிக்குள்ள முழுகி எழுந்தான், அவன் மண்டைல பட்டு ஒரே செகப்பா தண்ணி ஆயிடுச்சு (ஒண்ணும் இல்ல, அது உளுத்துப் போன செங்கல்லு தண்ணில பட்டவுடனே பொடிப் பொடியா கரைஞ்சுடுச்சி, தண்ணில கல் விழுந்ததால அதனோட வேகமும் கொறஞ்சிடுச்சு, பெருசா ஒன்னும் அடிபடல) உடனே எங்க அக்காவும் அவங்க ஃபிரெண்ட்ஸும் அந்த ஆளு தலைல அடிபட்டு ரத்தம்தான் கொட்டுதுன்னு பயந்துகிட்டு ஓடி வந்து வந்து அவங்கவங்க வீட்டுக்குள்ள பதுங்கிட்டாங்க. அந்த ஆளு அப்படியே எழுந்து வந்து கரெக்ட்டா எங்க வீட்டு வாசல்ல நின்னு சத்தம் போட்டான். அந்த சமயத்துல எங்க சித்தப்பா வேலைலேர்ந்து வீட்டுக்கு வந்தாரு. அவர்கிட்ட அவன் கம்ப்ளெயிண்ட் செஞ்சான் உங்க பொண்ணு என் தலைல கல்லப் போட்டான்னு. (பாவம் சொட்டைத் தலை வேற) எங்க சித்தப்பாவுக்கு எங்க அக்கா மேல தனிப் பாசம் (அவரோட பொண்ணு செத்ததால அவருக்கு பொண் கொழந்தைன்னா ரொம்ப பாசம்) அவர் அவனை கன்னா பின்னான்னு திட்டி அனுப்பிட்டிட்டார், என் பொண்ணையாடா சொல்றே, அவ ரொம்ப அடக்கம்டான்னு. பயந்த மாதிரி போஸ் கொடுத்திட்டிருந்த எங்க அக்காவுக்கு கேண்டீனிலேர்ந்து கொண்டு வந்த ஸ்வீட் குடுத்து சமாதானப் படுத்தினாரு சித்தப்பு. நாங்க அன்னிக்கு மாட்டிட்டோம். முதுகு பழுத்துடுச்சு. (மண்டைய ஒடச்ச அக்காவுக்கு ஸ்வீட்டு, எங்களுக்கு முதுகுல தவில், எல்லாம் நேரம்) ஆனா அன்னிக்கு எங்களையெல்லாம் எதிர்நீச்சல் சினிமாவுக்கு ஈவினிங் ஷோ அனுப்பினாருன்றது வேற கதை. (பசங்களை மட்டும், தரை டிக்கெட். பொண்ணைக் கூட்டிக்கிட்டு நைட் ஷோ போவாங்க ஃபர்ஸ்ட கிளாசுக்கு. அப்பலேர்ந்தே பெண்களின் ஆதிக்கம் ஆரம்பிச்சாச்சு.) கோவத்துல அடிச்சிடுவாரு, அப்பறம் இழுத்து வெச்சுக் கொஞ்சுவாரு.

மதியம் சாப்பிட்டப்பறம் (அருமையான பழைய சோறு, பாட்டி கையால, மாவடு, மாகாணிக்கிழங்கு இப்படி ஏதாவது தொட்டுக்க) போடுவாங்க. அப்ப வெய்யில்ல விளையாட விடமாட்டாங்க. தாயம், கேரம் போர்டு, சீட்டுக் கட்டு இப்படி ஏதாவது விளையாடுவோம் 4 மணி வரை. இப்படி இல்லாம தாவாரத்துல வெய்யிலை வெளையாடிணோம், எங்க பாட்டி முதுகு பழுக்க வெச்சுடுவாங்க, இதுல ஒரு இன்டரஸ்டிங்கான விஷயம் என்னன்னா அவங்களுக்கு சரியா பார்வை தெரியாது, மசமச ன்னு உருவம் மட்டும்தான் தெரியும், எல்லாரும் ஏறக்குறைய ஒரே ஒயரம், சட்டை போட்டுக்க மாட்டோம். (அப்பல்லாம் வீட்டுக்குள்ள சட்டை போட்டுக்கக் கூடாது) அதுனால யார் முதுகுலயாவது ஒண்ணு வெப்பாங்க.(பெரும்பாலும் ஈரக்கையோடதான் இருப்பாங்க, அப்ப முதுகுல வாங்கினா எப்படி இருக்கும்னு அனுபவிச்சாதான் தெரியும்). அடிவாங்கினவன் "ஐயோ பாட்டி, நான் அந்தாத்து பையன்"னு அவங்க அம்மா பேரு சொல்லி அலறுவான். (யாரும் கோவிச்சுக்க மாட்டாங்க, இன்னும் ரெண்டு வைங்கன்னு சிபாரிசு செய்வாங்க). உடனே எல்லாரும் தேன் கூடு கலைஞ்சா மாதிரி சிதறி ஓடிடுவோம் ஆளாளுக்கு ஒரு தெசைல. 4 மணிக்கு ஏதாவது பட்சணம், சூடா டீ குடுத்து வெளயாட அனுப்புவாங்க (இப்படித்தான் சின்ன வயசுலேயே நம்மளை சாப்பாட்டு ராமன் ஆக்கிட்டாங்க)

சாயங்காலம் 4 மணிக்கப்புறம் ஒட்டக விளையாட்டு விளையாட்டு விளையாடுவோம், ஒவ்வொருத்தனும் முதுகுல இன்னொருத்தனை தூக்கிட்டு ரேஸ் ஓடணும். அப்படி என்னை எங்க சித்தப்பா பையன் தூக்கிட்டு ஓடறப்ப இன்னொரு பையன் அவன் காலை தடுக்கிவிட்டான் ரெண்டு பேரும் கீழே விழுந்தோம். அங்க குமுட்டி அடுப்பு அலம்பி காய வெச்சிருந்தாங்க. அது என் மோவாய்க்கட்டைய வெட்டிடுச்சு. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் பிளாஸ்திரி போட்டாங்க வெள்ளையா. அப்ப அப்புசாமிக் கதை ஃபேமஸ் குமுத்துல. அவரோட தாடி மாதிரி இருக்கு என் மோவாய்கட்டைன்னு எனக்கு அப்புசாமின்னு பேர் வெச்சுட்டாங்க.

5 மணி ஆனாதான் வீட்டுக்கு வெளியே போய் கிரௌண்ட்ல அரை மணி நேரம் விளையாட விடுவாங்க. 5.30க்கு வீட்டுக்கு வந்துடணும். கை கால் அலம்பி ஸ்தோஸ்திரம் சொல்லி முடிச்சா அப்பறம் மறுபடி வீடு வீடா போயி விளையாட்டு.
ஞாயித்துக் கிழமையானா எங்க சித்தப்பா மலைக்கோட்டை கூட்டிட்டுப் போவாரு (நடந்தே போகணும்) போகும்போது பாலக்கரை பிரம்மானந்தால சர்பத். உச்சிப் பிள்ளையார் தரிசனம் முடிஞ்சவுடனே தெப்பக்குளம் காமதேனுல சமோசாவும் கரும்பு ஜூஸும். 


S V Ramani's photo.


எங்க சித்தப்பா பிரபாத் தியேட்டர் வாசல்ல நைட் கடை போட்டிருந்தாரு. அதுனால தியேட்டர்ல எல்லாரையும் பழக்கம். நைட் சிவாஜி படம் எதாவது ஓடினா எங்களை கொண்டு போய் விட்டுடுவாரு. (ஃப்ரீதான்). படம் முடிஞ்சு வந்தவுடனே அவர் கடைல பூரியோ தோசையோ குடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவாரு. இப்படியே ஜாலியா பொழுது போகும்.

லீவு முடியப்போற நாலஞ்சு நாள் இருக்கறச்சே எங்க அம்மா வந்துடுவாங்க தருமபுரிலேர்ந்து எங்களை கூட்டிட்டு போக. அவங்க வந்தா கல்லணை, முக்கொம்புன்னு ப்ரோக்ராம் இருக்கும். அப்பறம் திருச்சி சுத்துப்பட்டுல இருக்குற எங்க அம்மாவோட சொந்தக்காரங்க வீடு அப்படின்னு கொஞ்சம் பிஸிதான். இப்படிதான் ஒரு தடவ வாளாடில இருக்கற அவங்க மாமாவப் பாக்கக் கூட்டிட்டு போனாங்க. போகறப்பவே நான் சொன்னேன். நான் வரல, பிரபாத்ல சந்திரலேகா படம் ஓடுது இன்னிக்கு கடேசி, அதைப் பாக்கணும்னு, அவங்க சாயங்காலம் வந்துடலாம்னு சொல்லிக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க போயி கெளம்பர வழியா தெரியல. சரி நைட் ஷோவாவது போவோம்னு பாத்தா அங்கேர்ந்து 8 மணிக்குத்தான் கிளம்பினாங்க, வந்து சேர 10.30 ஆயிடுச்சு. எனக்கு துக்கம் தாங்கல (அந்த துக்கம் தர்மபுரில அன்னசாகரம் சித்ரால அந்தப் படத்தை ஏழெட்டு வருஷம் கழிச்சுத்தான் பாத்து கழிஞ்சுதுன்றது வேற விஷயம்).


No automatic alt text available.

இப்படியே திருச்சி மாநகரை ஒரு கலக்கு கலக்கிட்டு ஊர் வந்து சேர்ந்தோம். ரெண்டாவது பாஸ் செஞ்சு மூணாம் கிளாஸ் போயாச்சுன்னு ரிசல்ட் போட்டாங்க.

(தொடரும்)
பால்குடி டேஸ் (PAAL KUDI DAYS)
தருமபுரி நினைவுகள் - 3

இந்த வாரம் பள்ளிக்கூடத்தை விட்டு கொஞ்சம் வீட்டுல நடந்ததப் பாப்போம். 

அப்ப எங்க ஊர்ல பொழுதுபோக்கு கோயில் இல்லேன்னா சினிமாதான். ஊருக்குள்ள வேற ஒண்ணும் சுவாரசியமா கிடையாது. எப்பவாவது சர்க்கஸ், பொருட்காட்சி இப்படி வரும். அதை விட்டா கொமர்சாம்பட்டி தேர்தான் (குமாரசாமிப்பேட்டை) எங்க ஊர்ல ஸ்பெஷலு. மத்தபடி கோவிலோ சினிமாவோதான்.

ஊருக்குள்ள மூணே மூணு பெரிய தியேட்டர்தான் , சென்ட்ரல், கணேசா லட்சுமி. அப்பறம் மேற்கால ரவி, தெற்கால ரவி பாரடைஸ், கிழக்கால சித்ரான்னு (அன்னசாகரம்) கூரைக் கொட்டாய்ங்க. வடக்கால வாஸ்து சரியில்லைன்னு கட்டல போல.

எங்க அம்மா மாசத்துக்கு ஒன்னு, ரெண்டு சினிமா பாப்பாங்க. கூடவே எங்களையும் கூட்டிக்கிட்டு போவாங்க, நமக்கு அப்ப எல்லாம் ஒரு இடத்துல 3 மணி நேரம் உக்காந்திட்டிருக்க இருப்பு கொள்ளாது. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல பின்பக்கம் திரும்பி உக்காந்துக்கிட்டு ஓட்டை வழியா வர வெளிச்சத்தை (PROJECTOR HOLE) பாத்திட்டிருப்பேன். அதுவும் போரடிச்சா, தண்ணி வேணும்னு அடம்பிடிப்பேன். அப்ப எல்லாம் இது மாதிரி பொது இடத்துல தண்ணி கிடைக்காது. அதுனால கலர் வாங்கித் தருவாங்க. (அதுக்காத்தானே தண்ணின்னு அடம் புடிக்கறது) அப்பறம் இப்பவே பாத்ரூம் வருதுன்னு அடம் புடிப்பேன். மத்தவங்க சுவாரசியமா படம் பாக்கறப்ப நைசா சீட்டிலேர்ந்து எழுந்து மாடில ப்ரொஜெக்டர் ரூமுக்கு போயிடுவேன். இடைவேளைல தேடுவாங்க. அப்பறம் கம்ப்ளயின்ட் செய்ய மேனேஜர் ரூமுக்கு போனா (எல்லா தியேட்டர் மேனேஜரும் அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க) அங்க பையன் ப்ரொஜெக்டர் ரூம்லதான் தூங்கிட்டிருக்கான், பயப்படாதீங்கன்னு சொல்லி, அப்பறம் நான் கண் முழிச்சவுடனே, போண்டா, வடை, ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் குடுத்து எங்க அம்மா கிட்ட கொண்டு வந்து விடுவாங்க. இந்த ரோதனை தாங்காம என்னை அப்பப்ப விட்டுட்டு போக ஆரம்பிச்சாங்க ஏதாவது ஒரு காரணம் சொல்லி. நம்ம எவ்வளோ அப்பாவி பாருங்க. கற்பூரம் படத்துக்கு போனாங்க, நானும் வருவேன்னதுக்கு, "வேணாம்டா, கல்பூரம் எரியறப்ப நெறையா பொகை வரும், ஒன் கண்ணெல்லாம் எரியும்" னு சொன்னாங்க. நானும் பயந்து சரின்னு வீட்டுலே இருந்துட்டேன். (இன்னிவரை அந்தப் படம் பாக்கவே இல்லையே! ரொம்ப மானஸ்தன்!).

அப்பறம் நமக்கே சிவாஜி படம்னா ஒரு இன்டரஸ்ட் வந்துச்சு. அது தவிர ஊருக்கு வெளில இருக்கற தியேட்டருக்கு போனா குதிர வண்டிதான். ஏதோ பிக்னிக் பாக்கறா மாதிரி இருக்கும். கைல மிக்ஸர், பிஸ்கட் எல்லாம் கட்டி எடுத்து வந்துடுவாங்க அம்மா. இப்படி முஸ்தீபுகளோட என்னுடைய தானைத்தலைவர் (அன்றும், இன்றும், என்றும்) சிவாஜி நடிச்ச காவல் தெய்வம் பாக்கப் போனோம். பாவம் சிவாஜி அவரை ஜெயில்ல போட்டிருப்பாங்க. சரி கடைசில விட்டுடுவாங்கன்னு நான் படம் பாத்திட்டிருந்தேன். கடைசில தூக்குல போட்டுட்டாங்க. அவர் செத்துடுவாரு. நான் அங்கேயே விழுந்து புரண்டு "ஓ"ன்னு அழுதேன். என்னை குண்டுக்கட்டா கட்டி குதிரவண்டில வீட்டுக்கு தூக்கிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. வீட்டுலேயும் அழுகைதான். 2, 3 நாள் ஸ்கூலுக்கு போகல (பெரிய எம் பி ஏ படிப்பு!) இப்படியே ஒரு 10 நாள் ஓடிச்சு

ஒரு நாள் சாயங்காலம் அப்பா மிக்ஸர், பக்கோடா எல்லாம் வாங்கி வந்தார். இன்னிக்கு நம்ம எல்லாம் சிவாஜி படம் பாக்கப் போறோம்னு சொன்னார். நான் நம்பல, நான் வரமாட்டேன், அவர்தான் அப்பவே செத்துட்டாரேன்னு சொன்னேன். எங்க அப்பா எனக்கு தன்மையா எடுத்து சொன்னாரு, அவர் சாகலைடா, நான் உனக்கு ஒரு சிவாஜி என்ன, 3 சிவாஜி காமிக்கறேன்னு சொல்லி என்னை கூட்டிக்கினு போனாரு. நான் அரை மனசோட போனேன். என்ன ஆச்சரியம், நெஜமாவே மூணு சிவாஜி! அதுல அப்பா சிவாஜியையும், அண்ணன் சிவாஜியையும் பாக்கறப்போ பயமா இருந்தாலும், "ஆஹா, சிவாஜி சாகலை, உயிரோடுதான் இருக்கார்னு ஒரு சந்தோஷத்தோட படத்தை ரசிச்சுப் பாத்தேன். படம் முடிஞ்சு அப்பா கிட்ட என்னோட சந்தேகத்தை "டாடி, ஒரு டவுட்டு"ன்னு கேட்டேன். அவர் புரிய மாதிரி, இதெல்லாம் நிஜம் இல்லடா, கதை, இவங்க எல்லாம் ஆக்ட் செய்யறாங்க, அது மாதிரின்னு, சொன்னார். அப்பறம்தான் மனசு சரியாச்சு.


Image may contain: 2 people, people sitting

இது இப்படி இருக்க, எங்க அம்மா எம் ஜி ஆர் படமும் பாப்பாங்க. எனக்கு அதில இன்டரஸ்ட் இல்ல, பாதி படத்துல வீட்டுக்கு ஓடி வந்துடுவேன், அம்மா வர வரைக்கும் தெருவில விளையாட்டுதான். பசிச்சா, யார் வீட்டுலேயாவது சாப்பாடு. அப்படியே தூங்கிடறதும் உண்டு. அம்மா வீட்டுக்கு வந்தவுடனே கொண்டு வந்து விட்டுவாங்க.

இதை தவிர பசங்களுக்கு பொழுது போக்குன்னு சொன்னா அது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல பார்க்குன்னு ஒண்ணு, கொஞ்சம் செடி, ஒரு பெரிய சறுக்கு மரம், அப்பறம் சங்கு ஊதுற கோபுரம். தெருவில பெரிய பசங்களோட அங்க எப்பவாவது விளையாட அனுப்புவாங்க. அங்க போயி சறுக்கு மரம் ஏறி சறுக்கி, டவுசரக் கிழிச்சிக்கிட்டு, முட்டிக்கால் எல்லாம் பேத்துக்கிட்டு வருவோம். அந்த சங்கு தினோம் காலம்பற 8 மணி, மதியம் 1 மணி சாயந்திரம் 5 மணின்னு ஊதுவாங்க. அப்பறம் தலைவர்கள், காந்தி, அண்ணாதுரை மாதிரியானவங்களுக்கு அவங்க செத்த டயத்துல ஊதுவாங்க. நாங்க வெளையாடற சமயத்துல ஊதினா சவுண்டு தாங்காம ஒரே ஓட்டம்தான் வீட்டுக்கு. ஒரு மைல் தூரம் காதைக்கிழிக்கற சவுண்டு தொரத்திட்டே வரும்.

சாயங்காலம் தெருவில ஓடிப் பிடுச்சு விளையாடறது, (ஜூட், அம்பிளீஸ்) நொண்டி, ஐஸ் பாய் (ஐ ஸ்பை (EYE SPY) க்கு நாங்க வெச்ச பேரு) விளையாடுவோம். இது போக தெருக் கடைசில இருக்கற டீச்சர் வீட்டுல ஊஞ்சல் ஆடுவோம்.

இப்படியே பொழுதைக் கழிச்சு முழுப் பரீட்சை முடிஞ்சு லீவு விட்டாங்க.
(தொடரும்)