Monday, 6 November 2017

பால்குடி டேஸ் - 16 தருமபுரி நினைவுகள்.

அப்பாடி! அப்படி இப்படி ஒழுங்கா படிச்சு பத்தாவது போயாச்சு. 10ஆவதுல எலெக்டிவ்ஸ் னு ஒரு சப்ஜெக்ட். விருப்பப் பாடம். கூடுதல் பாடமும். அது  ஒரு நல்ல ஸ்கீமா இருந்துச்சு. பின்னாடி காலேஜ்ல நம்ம எதுல படிக்கப் போறோமோ அதுக்கு ஸ்கூல்லயே நம்மள தயார் படுத்திடுவாங்க. நான் எஞ்சினீரிங். மத்தவங்க எல்லாம் என்ஜினீயர் ஆகற கனவோடு அந்த சப்ஜெக்ட் எடுத்தாங்களோ என்னவோ, நான் அந்த சப்ஜெக்ட் எடுத்தா, ஹிஸ்டரி ஜியாகிரஃபி, சயின்ஸ், தமிழ் இலக்கணம் இதெல்லாம் கிடையாதுங்கறதால இதுதாண்டா நம்ம சப்ஜெக்ட்ன்னு எடுத்துட்டேன். ஜெனரல் மேத்சும் கிடையாது. இந்த சுப்ஜெக்ட்களுக்கு பதில் எலெக்டிவ் மேத்ஸ், ஜெனரல் என்ஜினீயரிங், என்ஜினீயரிங் சயின்ஸ், என்ஜினீயரிங் டிராயிங், என்ஜினீயரிங் பிராக்டிகல் (கார்பெண்டரி &ஃபிட்டிங்).

மொதோ மாசம் மன்த்லி டெஸ்ட்ல எலெக்டிவ் மேத்ஸ்ல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எல்லா பசங்களும் "டேய், இவன் எலெக்டிவ் மேத்ஸ்ல ஃபர்ஸ்ட்னு பேசிக்கிட்டப்ப கொஞ்சம் பெருமையாதான் இருந்தது. இங்கிலீஷிலேயும் நல்ல மார்க். எங்க அப்பாவுக்கும் ரொம்ப சந்தோஷம். (பாவம்,வாழ்க்கைல என்னால அவர் பட்ட ஒரே ஒரு சந்தோஷம் இதுவாத்தான் இருக்கும்). ஒரு செகண்ட் ஹான்ட் சைக்கிள் வாங்கித் தந்தார். ஃபிலிப்ஸ் சைக்கிள். நல்ல தரமானது. மொதோ வேலையா அதுல என் பேர அழகா எழுதினேன். (அடடா, இப்பதான் ஞாபகம் வருது, நம்ம சைக்கிள் கத்துக்கிட்ட படலம் எழுத மறந்தே போச்சு. சரி அதை தனி ஒரு படலமா எழுதிடுவோம்)

ஒண்ணு ரெண்டு மாசத்துலயே எங்கள கார்பெண்டரில வாத்தியார் நல்லா தட்டி கொட்டி வேலை செய்ய பழக்கிட்டாரு. அவர் பேர் ஆரோக்கியசாமி. நாகேஷ் மாதிரி உடம்பு, அவ்வளவு ஆரோக்கியம். (ஆனா நல்ல ஸ்ட்ராங்கான பாடி). பசங்க கிட்ட ஜாலியா பழகுவாரு. சின்ன சின்ன ரிப்பேர் வேலையெல்லாம் வீட்டுல செய்யறதுக்கு டூல்ஸ் எடுத்துப் போறதுக்கு விட்டுடுவாரு.

எங்க இங்கிலீஷ் வாத்தியார் அமிர்தலிங்கம். அசப்புல அந்த கால நடிகர் M K ராதா (சந்திரலேகா ஹீரோ) மாதிரியே இருப்பாரு. மீசை கொஞ்சம் சின்னதா வெச்சிருப்பாரு. அதுனால அவருக்கு ஹிட்லர்னு பேரு. ரொம்ப நல்ல வாத்தியார்தான். தினமும் மனப்பாட செய்யுள் ஒப்பிக்கணும். எனக்குக் கொஞ்சம் கீச்சுக் கொரல். அதுனால ஒரக்க ஒப்பிப்பேன். பசங்க எல்லாம் சிரிப்பானுவ. வாத்தியாரும் லைட்டா சிரிச்சுப்பாரு. கொஞ்ச நாள் போன ஒடனே என்னையும் என் பக்கத்துல ஒக்கார்ற கமலாகரனையும் நீங்க ரெண்டு பெரும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடுவாரு. அவனும் நல்லா படிப்பான். இதுல எல்லாருக்கும் கடுப்பு, பின்ன காலைல வந்தவுடனே இங்கிலீஷுல செய்யுள் கேட்டா, கிராமத்துலேர்ந்து வர பசங்க என்ன செய்வாங்க, அவனுகளுக்கு தமிழ் செய்யுளே வராது. இதுல நம்ம என்ஜினீயரிங் பசங்கதான் ரொம்ப கடுப்பா இருந்தாங்க.

இந்த வருஷம்தான் ஆல்ஃப்ரெட் கனகராஜ் என்ட்ரி. கொஞ்ச நாள்லயே என்கூட நல்லா பழகி க்ளோஸ் ஃபிரெண்டாயிட்டான் (என்னை அன்று சிந்திய ரத்தம் கூட்டிட்டு போனவன் இவன்தான்) ஏதாவது செய்யணும்னு யோசிச்சு எஞ்சினீரியங் பசங்க திட்டம் தீட்டினாங்க. இவங்க திட்டம் தீட்ட என்கிட்டதான் ஐடியா கேப்பாங்க. எங்க வகுப்புக்கு கதவு கிடையாது. அப்பத்தான் புதுசா சில வகுப்புகள் கட்டினதால கதவு வெக்கல. உள் பக்கமும் சிமெண்ட் பூசல. அப்படியே செங்கல்செங்கலா இருக்கும். கார்பெண்டரி வாத்தியார் கிட்ட சொல்லி, உளி, மர சுத்தியல் (பெருசா இருக்கும்), ஸ்க்ரூ ட்ரைவர் எல்லாம் தேவையானது எடுத்துட்டாங்க. ஸ்கூல் 4.30 க்கு விடும். எல்லாரும் கிரௌண்ட்ல விளையாடிட்டு 6 மணிக்கு க்ளாஸ்ல நுழைஞ்சாங்க. முத வரிசைல இருக்கற ஒரு 4, 5 டெஸ்குக்கு டாப்ப ஓபன் பண்ணி பழையபடி அது இருக்காரா மாதிரியே வெச்சுட்டாங்க. எங்க வாத்தியாருக்கு ஒரு பழக்கம். நுழைஞ்சவுடனே நாங்க "குட் மார்னிங்" சொன்னவுடனே அத சிரிச்சுக்கிட்டே ஏத்துப்பாரு (எவ்வளோ நல்ல மனுஷன்) அதுக்கப்பறம் சட்டை கழுத்துல கைவெச்சு அதை ஒரு முறை மேல தூக்கி விட்டுப்பாரு. அடுத்ததுதான் இன்டெரெஸ்ட்டிங் மேட்டர். லைட்டா மேஜையை ஒரு முறை தூக்கி வெப்பாரு. அப்பறம் அவர் ஒக்கார்ற ஸ்டூல தூக்கி அடஜஸ்ட் செஞ்சுட்டு ஒக்காருவாரு. நம்ம பசங்க என்ன செஞ்சாங்க தெரியுமா. மேஜையை பார்ட் பார்ட்டா கழட்டி அப்பறம் அதே மாதிரி சும்மா செட் பண்ணி வெச்சுட்டாங்க. ஸ்டூலையும்தான். இது தவிர செங்கல் செவுரு பூரா "ஹிட்லர் ஒழிக" னு எழுதி வெச்சுட்டானுக.

மறுநாள் காலைல சார் வந்தாரு, வந்தவுடனே வழக்கம் போல எங்களை ஹோம்ஒர்க் நோட்ட எடுத்து வெக்க சொன்னாரு. பசங்க டெஸ்க்க ட்ரங்க் பொட்டி தொறக்கறா மாதிரி தொறந்து புஸ்தகத்த எடுத்து வெச்சாங்க. வாத்தியார் கடுப்பாயிட்டாரு. அப்பறம்தான் கவனிச்சாரு செவுத்துல பூரா ஹிட்லர் னு எழுதியிருக்கறத. அவர் அப்படி கோவப்படுவார்னு நான் எதிர்பார்க்கல. "எனக்கு ஹிட்லர்ன்னு பேர் வெச்சிருக்கீங்கனு எனக்கு தெரியும்டா. ஒரு வரலாற்றுப் புகழ் பெற்றவரின் பேர எனக்கு வெச்சிருக்கீங்கறதுல எனக்கு பெருமைதான்" அப்படின்னு கத்திட்டு மேஜையை தூக்கினாரு பாருங்க டாப் அவர் கைல மீதியெல்லாம் சரிஞ்சு விழுந்துடுச்சு. அப்படியே அதை கீழே போட்டாரு. ஸ்டூல்ல உக்கார்ந்தாரு. ஸ்டூல் பொத பொதன்னு சரிஞ்சு அப்படியே பின்னாடி சாஞ்சிட்டாரு. நான் இதை எதிர்பார்த்தேன். நானும் இன்னொரு ஃபிரெண்டும் ஓடிப் போயி அவரை கீழ விழாம புடிச்சுட்டோம்.அவர எங்க பெஞ்சுக்கு கூட்டி வந்து ஆசுவாசப் படுத்தினோம். தண்ணி குடுத்தோம். தண்ணி குடிச்சிட்டு ஒன்னும் சொல்லாம எழுந்து க்ளாஸ விட்டு போயிட்டாரு.
எனக்கு ஒரு வித கில்டி ஃபீலிங்.

அன்னிக்கு அவர் கிட்ட ட்யூஷன் படிக்க வந்த பசங்கள கண்னா பின்னான்னு திட்டியிருக்காரு. அந்தப் பசங்க ஒண்ணுமே செய்யல பாவம். எங்க குரூப்தான் செஞ்சது. இது யாருக்கும் தெரியாது. அந்தப் பசங்க கடுப்பாயி வீட்டுக்குப் போறப்ப பெரிய பெரிய செங்கலா அவர் வீட்டு ஓட்டுக் கூரை மேல வீசி எறிஞ்சிருக்காங்க. பாவம் அதுல அவருக்கு பிபி எகிறி அவர் ஒரு வாரம் லீவு போட வேண்டியதா போச்சு. இதுல எனக்கு ரொம்ப வருத்தம். ஒரு நல்லவர இப்படி செஞ்சுட்டாங்களேன்னு. ஆனா அவர் மறுபடி வந்து க்ளாஸ் எடுக்கறப்ப பசங்க ரொம்ப நல்லபடியா இருந்தாங்க. அவரும் ஒண்ணுமே கேக்கல யாரையும். ஹெட்மாஸ்டர் கிட்டக்க கூட ரிப்போர்ட் செய்யல.

நான் 9ஆவது படிக்கறப்ப காந்தி ஜயந்தி அன்னிக்கி (1975) காமராஜர் இறந்து போயிட்டாரு. எங்க தெருவுல வெங்கடேசன்னு ஒரு அண்ணன். எங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கற மாமாவோட பையன். அவர் காங்கிரஸ் அபிமானி. தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சிலவும் நிரந்தர மெம்பர். அவர நாங்க தலைவர் னு தான் கூப்பிடுவோம். அவர் யோசனைப்படி எங்க தெருவுல "காமராஜர் நினைவு நற்பணி மன்றம்" னு ஆரம்பிச்சோம். எங்க தெரு முட்டுத் தெரு. அந்த முட்டு ஒரு வீட்டோட பின் சுவர். அதுல மன்றத்தோட பேர் எழுதி ஆரம்பிச்சோம். நான்தான் எழுதினேன். மொதோ மொதோ ஒரு நல்ல காரியத்துக்கு எழுதினேன். இப்ப பத்தாவதுல ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு. அவருடைய மொதோ நினைவு நாளையும், மன்றத்தின் மொதோ ஆண்டு விழாவையும் ஒண்ணா கொண்டாட முடிவு செஞ்சோம். உங்களுக்கு நினைவு இருந்தா அப்பல்லாம் கரெக்ட்டா காந்தி ஜெயந்தி அப்பத்தான் ஆயுத பூஜை வரும். விழா கொண்டாட தெருல எல்லார் கிட்டயும் வசூல் பண்ணோம். விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டி, ஓவிய போட்டி எல்லாம் நடத்தினோம். ஷியாம் சுந்தர் னு ஒரு அண்ணன். கலை ஆர்வம் மிக்கவர். "பவளக்கொடி" நாடகம் போடலாம்னு முடிவு செஞ்சாரு. அதுக்கு அவரே ஸ்க்ரிப்ட் ரெடி செஞ்சு வசனம் எல்லாம் எழுதினார். கதை அப்படியே இருக்கும். ஆனா வசனம் எல்லாம் கொஞ்சம் தமாஷா இருக்கும். எல்லாருக்கும் சந்தோஷம். எங்க அண்ணன்தான் கிருஷ்ணர். அவனுக்கு நல்ல சுருட்டை முடி. அவன் முக அமைப்பு கிருஷ்ணர் வேஷத்துக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். ரமணி நீயும் நடிக்கறேன்னு சொன்னாரு சுந்தர். ஆஹான்னு நெனைக்கறதுக்குள்ள நீதான் பவளக்கொடின்னு ஒரு குண்டு போட்டாரு பாருங்க. என்னோட இது தகடூருக்கு வந்த சோதனைன்னு நெனச்சு நொந்து போயிட்டேன். ஆனா தப்பிக்க முடியாது. விழாவுக்கு முன்னால 3 நாள் ரிகர்சல். இதுல நாரதரா நடிக்க ஆள் கிடைக்கல, எங்க அண்ணனே நாரதர் வேஷமும். கிருஷ்ணரும் நாரதரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காத நாடகம் இதுவாத்தான் இருக்கும். நாரதரா வர்றப்ப ஒரு காவி வேஷ்டியை கிருஷ்ணர் வேஷத்து மேலேயே சுத்திண்டு வந்துடுவான்.

சுந்தர் எழுதின வசனம் எப்படி தெரியுமா? அர்ஜுனனுக்கும் பவளக்கொடிக்கும், அந்தக் காலத்துலே வடிவேலு-கோவை சரளா டைப். எங்க அண்ணன் கிருஷ்ணருக்கு தேங்காய் ஸ்ரீநிவாசன் டைப்.

பகல்ல வெளையாட்டுப் போட்டிகள். வயதுக்கேத்தாப்பல க்ரூப் பிரிச்சு ரன்னிங் ரேஸ். பெண்களுக்குத் தனியா ஸ்கிப்பிங் போட்டி. பப்ளிக்ல ஓட யாரும் வரல. அப்பறம் டிராயிங் போட்டி. டிராயிங்ல நான்தான் ஃபர்ஸ்ட். காமராஜர் படம் வரைஞ்சேன். (வேற யாருமே கலந்துக்கல) என்னோட வயசுப் பசங்க ரன்னிங் ரேஸ்லயும் நான் தான் ஃபர்ஸ்ட்.
No automatic alt text available.

மாலைல தெருவிலேயே ஒருத்தர தலைமை தாங்க சொல்லி விழா ஆரம்பமாச்சு. மொதல்ல பாட்டுப் போட்டி. அதுலயும் நான்தான் ஃபர்ஸ்ட், ரெண்டாவதா வந்த சுகுமார்ங்கிற பையன் என்ன விட நல்லா பாடுவான். அவன் ஒரு சரியான பாட்டு செலெக்ட் செய்யாததால எனக்கு மொதோ ப்ரைஸ். (அடுத்த வருஷம் அவன்தான் ஃபர்ஸ்ட் வந்தாங்கிறது வேற விஷயம். நான் செகண்ட். இதுல பெரிய விஷயம் என்னன்னா நாங்க ரெண்டே பேர்தான் பாடினோம்)

அப்பறம் ப்ரைஸ் டிஸ்ட்ரிபியூஷன் செஞ்சாங்க. அடுத்து எல்லாரும் எதிர்பார்த்திருந்த நாடகம் ஆரம்பம். சும்மா சொல்லக் கூடாது. தெரு மக்கள் அனைவரும் திரண்டு மேடைக்கு முன்னாடி உக்கார்ந்தாங்க. அடுத்த தெரு ஆளுங்களும் நெறைய பேர். சுமார் 100 பேராவது இருக்கும். நாடகத்துக்கு நல்ல வரவேற்பு. சுந்தர் எழுதிய வசனங்கள் குபீர் சிரிப்பை வரவழைத்தன. என் அண்ணன் கிர்ஷ்ணராக தோன்றியபோது உண்மையிலே ஒரு பெரியவர் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். ஒரு கணம்தான். உடனேயே தன்னிலைக்கு வந்து விட்டார். ஆனால் நாடகத்தின் ஹைலைட் பவளாகக்கொடியாக தோன்றிய நான்தான். கிருஷ்ணர், அர்ஜுனனைவிட நான் உயரம். நல்ல ஜடை பின்னி, கீச்சுக் குரலில் நான் நாதா என்று ஆரம்பித்தபோதே பலத்த கைதட்டல். பிறகு நான் வசனம் பேசும்போதெல்லாம் நல்ல சிரிப்பு. நாடகம் இனிதே முடிந்தது. எல்லாரும் மகிழ்வுடன் திரும்பினர். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது, எப்போதாவது கோயில் விழாக்களில் நடக்கும் ஆர்கெஸ்டராதான். அதனால் வந்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றனர். எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.  நாடகம் முடிந்தவுடனே, நான் புடவையைத் மேலே தூக்கிக்கொண்டு ஓடி வீட்டுக்கு வந்தபோது அனைவருக்கு சிரித்தார்கள். இதில் இன்னொரு காமெடி. வீட்டில் நான் புடவை கட்டிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வரும்போது கொலுவுக்கு வந்திருந்த என் அக்காவின் சிநேகிதியும் அவர்களின் தங்கைகளும் என்னைப் பார்த்து "கொல்"லென்று சிரித்ததுதான் .

மூன்று வருடங்கள் இதை போல் நாடகம் நடத்தினோம். இரண்டாம் வருடம் அல்லியாக நடித்த பையன் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான். SSLC போயிட்டானாம். நானும்தான் SSLC. அதனால் நானே அவன் வேடத்தையும் நடித்தேன். டபுள் ஆக்ட். மூன்றாம்  வருஷம்தான் டாப். சுபத்திரையாக நடித்த பையன் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டான். நான் 3 வேடங்கள் போட வேண்டியதாயிற்று. அதற்கு அடுத்த வருடம் நானே இனி என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டேன். அதனால் நாடகம் நின்று ஒரு இசைக்கச்சேரி நடத்தினோம். சுமாராக இருந்தது. அதற்கப்புறம் நான் ஊரை விட்டு வந்து விட்டேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

அதற்கப்புறம் அந்த வருடம், ஸ்கவுட், கிரிக்கெட், பால் பேட்மிண்டன் என்று போயிற்று.
அடுத்த வரம் 11ஆவது வகுப்பில் நடந்தவை. நிறைவு வாரம் பால்குடி டேஸிற்கு.

சந்திப்போம் 

No comments:

Post a Comment