Friday, 30 June 2017

பால்குடி டேஸ் - 10 PAALKUDI DAYS
(தருமபுரி நினைவுகள்)

ஆறாவது லீவுல எங்களுக்கு பூணூல் போடறதுன்னு முடிவு செஞ்சாங்க. மொதல்ல எங்க ஊர் சத்திரத்துல எளிமையா முடிச்சிலாம்னு நினைச்சாங்க. அப்பறம் எங்க அம்மா "இது பசங்களுக்கு செய்யற முக்கியமான ஃபங்க்ஷன். அதுனால வீட்டுல கொஞ்சம் பெரிசா எல்லாரையும் கூப்பிட்டு செஞ்சுடலாம்னு சொன்னாங்க. அப்படியே முடிவாச்சு. அப்பல்லாம் ஒரு வாரம் முன்னாடியே ஒரம்பறைங்க (தருமபுரியில் உறவுமுறைக்கு வழக்குச் சொல்). வந்துடுவாங்க. எங்க சித்தப்பா, சித்தி குடும்பமும் அப்படியே வந்தாங்க. அவங்களுக்கு நாலு பசங்க. அதுல ரெண்டு பேருக்கு ஏற்கெனவே பூணல் போட்டாச்சு. மூணாவது பையனுக்கு எங்க கூட போட்டுடலாம்னு முடிவு பண்ணாங்க. எங்க அப்பாவும் செலவோட செலவா இருக்கட்டும், மூணு பேருக்கு போடக்  கூடாது, அதுனால ஒன் கடைசிப் பையனுக்கும் சேத்து நாலா போட்டுடலாம்னு சொல்லிட்டாரு. அந்தப் பையனுக்கு மூணரை  வயசுதான்.  எல்லாருக்கும் ஒரே ஜாலி.

மறுநாள் பூணல். அதுக்கு முன்னாடி நாள் ராத்திரி நல்ல மழை. நாங்க பகல்ல வீட்டுல எல்லாம் வேலையா இருந்தப்ப, தெருக்கடைசில தேங்கியிருக்கற தண்ணில குதிச்சு உருண்டு புரண்டு விளையாடினோம். அங்க எதிர் வீட்டுல ஒரு அய்யங்கார் இருந்தாரு. அவர் எங்களை விளையாடக் கூடாதுன்னு மெரட்டினாரு. நாங்க விளையாட்டு சுவாரசியத்துல அவரைக் கண்டுக்கல. போங்க மாமான்னு சொல்லிட்டு வெளையாடிட்டிருந்தோம். அது அவருக்கு அவமானமா போச்சாம். வெளில கெளம்பிட்டிருந்தவர், போற வழில எங்க வீட்டுல பசங்களை நான் தண்ணியில வெளையாடாதீங்கன்னு சொன்னதுக்கு என்னைப் போய்யான்னு மரியாதை இல்லாம பேசறாங்கன்னு பத்த வெச்சுட்டு போயிட்டாரு. எங்க பாட்டி எப்பவுமே இது மாதிரி கம்ப்ளயின்ட் வந்தா என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டாங்க. எங்களை செல்லமா வளக்கறாங்கன்னு கொஞ்சம் ஆங்காரம் ஜாஸ்தி. எங்கம்மாவ நல்லா அடிக்க சொல்லித் தூண்டி விடுவாங்க. அன்னிக்கும் அப்படிதான் தூண்டி விடவே, மறுநாள் ஃபங்க்ஷன் வேலைல மும்முரமா இருந்த எங்க அம்மா, கோவத்துல ஒரு தடி எடுத்து எங்களை வெளுவெளுன்னு வெளுத்துட்டாங்க. அது நல்ல வார்னிஷ் போட்ட தடி. முனைல பாம்பு மூஞ்சி. அதுக்குப் பேரே பாம்புத் தடிதான். கண்ணுமண்ணு தெரியாம அடிச்சதுல என் வலதுகைல (5 ஆவது படிக்கும்போது ஒடஞ்சு Z மாதிரி ஆச்சே, அதே கை) நல்ல அடிபட்டு ஆரஞ்சு சைஸுக்கு வீங்கிடுச்சு. பூசை போட்டு எல்லாரையும் படுக்க சொல்லிட்டாங்க. அப்பறம் மதியம் எங்க அம்மா வந்து சாப்பிடக் கூப்பிட்டாங்க. நான் வரமாட்டேன், நீ ஏன் என்ன அடிச்சே, நாங்க அப்படி சொல்லலைன்னு சொன்னேன். எங்க அம்மா வீங்கியிருந்த என் கையைப் புடிச்சு விட்டு அழுதாங்க. அவங்க அழுகையைப் பார்த்தவுடனே என் புடிவாதம் எல்லாம் போயிடுச்சு. அம்மா அழாதேம்மா, எனக்கு வலிக்கலன்னு அவங்களை ஆறுதல் செஞ்சு சாப்பிட்டேன்.

மறுநாள் பூணல் போட்டாங்க, வீடு நெறய சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க, எங்க ஃபிரெண்ட்ஸ்னு சரியான கூட்டம்.  பிரும்மோபதேசம் செஞ்சு வெச்சாங்க. அதை விட பெருசுங்க எல்லாரும், "அடேய் பசங்களா, தினமும் 3 தடவை சந்தியாவந்தனம் பண்ணனும், 108 தடவை காயத்ரி மந்திரம் சொல்லணும்னு செஞ்ச ஒபதேசம்தான் பெரிய ஒபதேசம்.

சந்தியாவந்தனம் சொல்லிக் கொடுக்க எங்களுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கற அய்யங்கார் மாமா முன்வந்தாரு. அவர் எல்லாத்துலயும் எக்ஸ்பர்ட். அன்னிக்கு சாயங்காலமே ஆரம்பிச்சுட்டாரு. நம்மளே செஞ்சா 20 நிமிஷம்தான். ஆனா மொதோ மொதல்ல செய்யறதால சொல்லிக்கொடுக்க ஒண்ணரை மணி நேரம் ஆச்சு. அந்த சின்னப் பையனுக்கு தூக்கம் கண்ணை சொக்கிச்சு, பாவம். அதை பாத்த எங்க சித்தப்பாவுக்கு அவமானமா போயிடுச்சாம், தன் பையன் மந்திரம் சொல்லாம தூங்கி வழியறான்னு. (என்னமோ இவர் டெய்லி செஞ்சா மாதிரி)  துர்வாச முனி, சரியான கோவத்துல பந்தல்ல கட்டியிருந்த வாழைமரத்திலேர்ந்து மட்டையை உரிச்சு அவனை விளாசு விளாசுன்னு விளாசிட்டாரு. பாவம், அவன் அடி தாங்காம "பூர்புவஸ்ஸுவஹ: தத் ஸ விதுர் வரேண்யம்" னு சொல்லிட்டே அங்கியும்  ஓடினதப் பாக்க எங்களுக்கு பரிதாபமா இருந்துச்சு.. அவனை இழுத்து வந்து ஒத்தக் கையால புடிச்சுக்கிட்டு நல்லா பின்னி எடுத்துட்டாரு. எங்க அப்பா வந்து சொன்னப்பறம்தான் நிறுத்தினார். எங்களுக்கு ரொம்ப பாவமா இருந்துச்சி. 

ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு எல்லாம் அவங்க அவங்க ஊர் போய் சேந்தாங்க. எங்க அப்பா லீவுல சவுத்ல இருக்கற கோவில் எல்லாம் போய் வரலாம்னு முடிவு பண்ணாரு. (ஒன்லி  தமிழ் நாடு & கேரளா). ஒரு அம்பாஸடர் கார் புக் பண்ணார். எங்களுக்கு ஒரே சந்தோஷம். மொதோ தடவையா கார்  சவாரி,அதுவும் ஊர் ஊரா. 

கெளம்பற நாள் வந்தது. காலைல ஒரு SHOCKING NEWS. பெட்ரோல் வெல 85 காசுலேர்ந்து 1.15 ஆயிடுச்சு. (அப்ப அது பெரிய விஷயம். பட்ஜெட்ல சரி அடி). என்ன செய்ய, வந்துதானே செட்டில் செய்யப் போறோம்னு கெளம்பியாச்சு. நாங்க பசங்க மூணு பேரு, எங்க அப்பாஅம்மா, பாட்டி, எதிர்வீட்டு மாமி ஒருத்தங்க, அவங்களுக்கு யாரும் கெடையாது. எங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. ஏழு பேர் + ட்ரைவர், ஒரு அம்பாஸடர்ல, இதுல அந்த மாமி கொஞ்சம் தாட்டியானவங்க வேற. எப்படித்தான் போயிட்டு வந்தோமோ, ஒரு வாரம் டூர்! டிக்கில ஒரு பம்ப் ஸ்டவ், தேவையான அரிசி, ரவை, பருப்பு வகைகள், போடு வகைகள் னு சமைக்க தேவையான சாமான்கள். (எனக்கு நாங்க போன கோயில்கள் முழுக்க நினைவில்லை, நெனைவு இருக்கறது மட்டும் சொல்றேன்.)

முதல்ல போனது குருவாயூர். எங்க அப்பாவுக்கு குருவாயூரப்பன் மேல ரொம்ப பிரியம். அங்க எங்க அண்ணனுக்கு எடைக்கு எடை வெல்லம் தர்றதா வெகு நாள் வேண்டுதல். அதை நிறைவேத்தினோம். குருவாயூரப்பன் அழகா இருந்தாரு. நல்ல தரிசனம். அங்க ஒரு பிரசாதம் தந்தாங்க. சர்க்கரைப் பொடி. நல்ல இருந்துச்சி. கொஞ்சம்தான் கிடைச்சுது. தரிசனம் முடிச்சு தங்கியிருக்கற ரூம் வந்தோம். சமையல் எல்லாம் ரெடி ஆச்சு. நான் கொஞ்சம் தூங்கி எழுந்து வந்தேன், எல்லாம் தயாரா எடுத்து வெச்சிருந்தாங்க. ஒரு பாத்திரத்துல கோயில்ல தந்த அந்த சர்க்கரைப் பொடி பிரசாதம்! ஆஹா! லபக்குன்னு ஒரு பெரிய கட்டியை (எலுமிச்சம்பழம் அளவு) எடுத்து எல்லாரும் டேய் திங்காத திங்காதன்னு கத்தக் கத்த வாயில போட்டு விழுங்கிட்டேன். அப்பா! ஒரே கரிப்பு, ஒமட்டல் வந்திடுச்சு. டேபிள் சால்ட்டு! ரொம்ப நாள் என் அண்ணனும் அக்காவும் இதை சொல்லி சொல்லி கேலி செய்வாங்க.

அங்கேர்ந்து காலடி போனோம். ஆதி சங்கரர் அவதரிச்ச புண்ணிய பூமி. கோயில் போறதுக்கு முன்னாடி அங்க ஓடற ஆத்துல குளிச்சிட்டு போனோம். அன்னிக்குத்தான் எனக்குத் தெரியும் எங்க அப்பாவுக்கு நல்லா நீச்சல் தெரியும்னு. நல்லா ரொம்ப தூரம் நீந்தி போயி வந்தாரு. (ஆனா அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது, கத்துக்கிட்டப்ப ஸ்கூல் செவுத்துல மோதி முட்டில அடி, சீ மனுஷன் ஓட்டுவானா இதன்னு விட்டுட்டாரு)

அங்கிருந்து திருவனந்தபுரம்.  திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்கு வழி கேட்டா எல்லா மலையாளிகளும், வாயாலவோ , இல்ல கைநீட்டியோ பதில் சொல்ல மாட்டேங்கறாங்க. தலை ஆட்டிதான். தலையை கீழேருந்து மேலுக்கு ஆட்டி இடது பக்கம் ஓடிச்சா, நேர போயி இடது பக்கம் திரும்பணுமாம். தமிழன்னா அவ்வளோ அலட்சியம். எங்களுக்கு வழி கொஞ்சம் சிரமமாயிடுச்சி  இருந்தாலும் விசாரிச்சிட்டேதான் இருந்தோம். ஒருத்தர் தமிழ்ல பேசினார், பாலக்காடாம், நான், வழி காட்டேறேன்னு கார்ல ஏறி உக்காந்துட்டாரு.  (கடைசில பாத்தா அவரும் கோவிலுக்குத்தான் போறாரு, ஓசில கார் சவாரி) ஏற்கெனவே இட நெருக்கடி. ஏறி ஒக்காந்தவர் கோவிலோட அருமை பெருமைகளை சொல்லிட்டே வந்தாரு. திடீர்னு "வண்டி திரும்பட்டும்"னு வலது பக்கம் கையை நீட்ட ட்ரைவர் மூஞ்சில அடி. அதுல இவர் திரும்ப இடம் வந்தப்பறம்தான் சொல்றாரு. ட்ரைவர் ஒகேனக்கல், ஏற்காடுன்னு வண்டி ஒட்டி பழக்கப்பட்டவரு. அதுனால நல்லா வீலை ஒடிச்சி திருப்பினாரு. மறுபடியும் அவரோட கதையை ஆரம்பிச்சுட்டாரு. திடீர்னு வண்டி நிக்கட்டும்னாரு. சடன் பிரேக்தான். என்னன்னு பாத்தா கோவில் தாண்டி வந்துட்டோம். அவரு இறங்கிக்கிட்டாரு. நாங்க ரிவர்ஸ் எடுத்து கோவில் போயி வந்தோம். 

அங்கிருந்து திருச்சூர், கன்யாகுமரி, சுசீந்திரம் கோவில் எல்லாம் போனோம். எனக்கு கோவில்ல அவ்வளோ இன்டரஸ்ட் இல்ல, ஏன் ட்ராவல்லயே இன்டரஸ்ட் கிடையாது. ஆனா கன்னியாகுமாரி. சுசீந்திரம் கோவில் எல்லாம் நல்லா இருந்தது. கன்யாகுமாரில விவேகானந்தர் பாறைக்கு போட்ல போனது நல்ல இருந்துச்சு. அங்க தங்கி சூரிய அஸ்தமனம், மறுநாள் காலை சூரிய உதயம் எல்லாம் பாத்துட்டு தான் சுசீந்திரம் கிளம்பினோம். சுசீந்திரத்துல கோயில்ல நல்ல சிற்ப வேலைப்பாடுகள். யாளிங்கற சிங்கமுகம் கொண்ட ஒரு அதிசய விலங்கு. அப்பறம் சப்தஸ்வர தூண்கள். அங்க உள்ள ஏழு தூண்களைத் தட்டினால், சரிகமபதநி ஓசை கேட்கிறது. அவ்வளவு தொழில் நுட்பம்.

அங்கிருந்து மதுரை, அன்றிரவு மீனாட்சி கோவிலுக்கு போய் வரும்போது எங்க அப்பாவுக்கு லோ பிபி. வர்ற வழியெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டே வந்தார். அப்பறம் ரூம் வந்து ரெஸ்ட் எடுத்தவுடன் பரவாயில்லை, மறுநாள் பழமுதிர்சோலை போயிட்டு வந்தோம். ரொம்ப நல்லா  இருந்தது. ஆனா எனக்குதான் எப்படா ஊர் வந்து சேருவோம்னு ஆச்சு. மதுரைலேர்ந்து திருச்சி வழியா ஊர் வந்து சேந்தோம். இன்னும் சில கோயில்கள் நினைவில் இல்லை. ஊர் வந்து வீட்டுக்குள் நுழைந்ததும்தான் "அப்பாடா" என்றிருந்தது.

"சொர்கமே என்றாலும், அது தருமபுரி போலாகுமா?"

தொடரும்
.

No comments:

Post a Comment